நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 7,757 ஆக உயர்வு
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை இன்று 7 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த 25ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தால் நேபாளத்தில் லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை இன்று 7 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது. கூடுதலாக 16 ஆயிரத்து 390 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியானவர்களில் பெரும்பாலானோர் சிந்துபால் சவுக் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மீட்பு பணியில் இந்தியா உள்பட பல்வேறு நாட்டு ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மீட்பு பணியில் பெரும்பகுதி முடிந்துவிட்டதாகக் கூறி வெளிநாட்டு குழுக்களை நாடு திரும்புமாறு நேபாள அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து நேற்று வரை இந்தியா உள்பட 12 நாடுகளைச் சேர்ந்த 600 பேர் நேபாளத்தை விட்டு வெளியேறியுள்ளனர். மீதமுள்ளவர்களும் விரைவில் அவரவர் நாடுகளுக்கு கிளம்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேபாள உள்துறை அமைச்சகம் புதன்கிழமை கூறியிருப்பதாவது,
பயங்கர நிலநடுக்கத்தால் 2 லட்சத்து 79 ஆயிரத்து 234 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. மேலும் 2 லட்சத்து 37 ஆயிரத்து 68 வீடுகள் பாதி சேதம் அடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.