தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி ஸ்டாலின் தலைமையில் மலரும்.. துபாயில் அன்பில் மகேஷ்
தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும் என துபாயில் நடைபெற்ற ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் திமுக சட்டசபை உறுப்பினர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
துபாய்: திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் 65வது பிறந்தநாளையொட்டி துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் சட்டசபை உறுப்பினர் அன்பில் மகேஷ் தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும் என தெரிவித்தார்.
துபாயில் நடைபெற்ற ஸ்டாலினின் 65வது பிறந்த நாள் விழாவில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று சிறப்பித்தார். திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலினின் 65வது நாள் விழா, துபாய் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடந்த சனிக்கிழமை அன்று, தேரா முத்தீனா எக்ஸெல்சியர் ஹோட்டல் அரங்கில் மாலை 7.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
அரிகேசவநல்லூர் மீரான் விழாவிற்கு தலைமை வகித்தார். கடையநல்லூர் இஞ்சினியர் மூ.மசூது வரவேற்புரையாற்றினார். விழா நாயகரான ஸ்டாலினை வாழ்த்தி நர்கிஸ் பானு ஜியாவுதீன், ஆயிஷா பானு, அஞ்சுகம், ஜெயராமன் ஆனந்தி, சசிக்குமார், ஹேமலதா, ஜியாவுதீன் ஆகியோர் பங்கு பெற்ற கவியரங்கம் நடந்தது.
தாயகத்திலிருந்து வருகை புரிந்திருந்த தமிழ் நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு பிரமுகர் அமீர் கான், மயிலாடுதுறை யூனியன் கவுன்ஸிலர் குமரசாமி மற்றும் லெப்பை குடிகாடு நகர கழக செயலாளர் ஜாஹிர் ஆகியோர் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கு கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
செயற்கரிய சேவை..
அபிவிருத்திஸ்வரம் ஜாகிர் ஹுசைன், சிம்மபாரதி, சொக்கநாதன்புரம் அமுது, முஹம்மது அனீஷ், பாவை ஹனீஃபா அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஹமீதர் ரஹ்மான், ஆஸிஃப் மீரான், செந்தில் பிரபு, அய்மான் சங்க துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹ்மான், ஜஸீலா பானு, செந்தில் பிரபு, சலீம் ஷேக், துபை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் பாலா மற்றும் குத்தாலம் அஷ்ரஃப் அலி,ஆகியோர் வாழ்த்தரங்கத்தில் கலந்து கொண்டு ஸ்டாலின் தமிழகத்திற்கு ஆற்றி வரும் செயற்கரிய சேவைகளைப் பற்றி வாழ்த்துரைத்து பேசினர்.
துபாய் தமிழர்களுக்கு பாராட்டு
தலைமையேற்றுப் பேசிய மீரான் திமுக மீண்டும் விரைவில் ஆட்சியைப் பிடிக்கும் எனவும், அப்போது வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் பேணும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் வாரியம் கழக அரசில் அமைத்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இறுதியில் சிறப்புரையாற்றிய திமுக இளைஞர் அணி துணைச் செயலாளரும், திருவறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வேலை நாளான சனிக்கிழமை என்றும் பாராமல் பெருவாரியாகத் திரண்டு தமிழகத்தின் இன்றைய நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் துபாய் வாழ் தமிழர்களுக்கு நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டார்.
விரைவில் திமுக ஆட்சி மலரும்
தமிழகத்தில் கூடிய விரைவில் திமுக ஆட்சி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மலரும் என்றும், அப்போது தமிழகத்தின் இருளகன்று ஆதவன் உதித்திடும் என்றும், அமீரகத் தமிழர்கள் அனைவரது கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் என்றும், குறிப்பாக வெளிநாடு வாழ் தமிழர் நலன் வாரியம் அமைக்க ஆவன செய்ய தம்மாலான அனைத்து முயற்சிகளையும் செய்வேன் எனவும் குறிப்பிட்டார். தளபதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை துபை அரசு லத்தீஃபா மருத்துவமனையில் நடந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
அன்பில் மகேஷ்க்கு நன்றி
துபை வாழ் அனைத்து தமிழ் அமைப்புகள், பல்வேறு ஊர்களைச் சேர்ந்த திமு கழக உடன்பிறப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சால்வை மற்றும் சந்தனமாலை அணிவித்து துபை நகருக்கு அவர் வருகைக்கு நன்றி தெரிவித்தனர். கடையநல்லூர் முஸ்தஃபா நன்றியுரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியை சிறப்பான முறையில் திருமதி சௌமியா விமல் தொகுத்து வழங்கினார்.