துபாயில் ஸ்டாலின் பிறந்த நாள் சிறப்பு ரத்ததான முகாம்.. அன்பில் மகேஷ் பங்கேற்பு
துபாய்: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் 65 ஆம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு துபாயில் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.
திமுக செயல்தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் 65 ஆம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, துபாய் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், 14-07-2017 வெள்ளிக்கிழமை பகல் 12 மணி முதல் 3 மணி வரை, துபை அரசு லத்தீஃபா மருத்துவமனை ரத்த வங்கியில் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.
துபாய் ரத்ததான நிலைய மேலாளர் ஜைனப் முன்னிலையில் திமுக மாநில இளைஞரணி துணைச்செயலாளரும், திருவறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்து, ரத்த தான முகாமைத் துவக்கி வைத்தார்.
துபை ஈஸா அல்குரைர் குழும இயக்குநர் மாஜித் ஈஸா அல்கைரைர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, முதல் இரத்த தானமும் அளித்தார். துபை வாழ் பெருமக்கள் இரத்ததான முகாமில் பெருமளவில் கலந்து கொண்டு இரத்த தானம் அளித்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் துபாய் இரத்ததான நிலைய மேலாளர் திருமதி ஜைனப் அவர்களுக்குஅன்பில் மகேஷ் பொய்யாமொழி பொன்னாடை கொடுத்து கெளவரவித்தார்.
அரிகேசவநல்லூர் S.S. மீரான் ஒருங்கிணைப்பில், அபிவிருத்திஸ்வரம் ஜாகிர் ஹுசைன், அமுது, பழநி சிம்மபாரதி, திரிகூடபுரம் முஸ்தஃபா, பாவை ஹனீஃபா, திருவறும்பூர் சக்தி, உதயநிதி நற்பணி மன்றத் தலைவர் பாலாஜி ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தனர்.
வரவேற்பு
முன்னதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அல்அய்ன் இந்தியன் சோஷியல் சென்டரில் மிகச் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. வியாழக்கிழமை அன்று அல்அய்ன் இந்தியன் சோஷியல் சென்டரில் மிகச் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
இந்தியன் சோஷியல் சென்டர் (ISC) தலைவர் நரேஷ் சூரி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ரஸல் முஹம்மத் ஸாலிஹ் முன்னிலை வகித்து, வரவேற்புரையாற்றினார். இலக்கியச் செயலாளர் ஜிதேஷ் புருஷோத்தமன், அல்அய்ன் தமிழ்க்குடும்பத் தலைவர் முபாரக் முஸ்தஃபா மற்றும் துரைராஜ் ராஜவேல், சலீம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பலர் பாராட்டிப் பேசினர்.
இளம் வயதிலேயே தம் சட்டசபை செயல்பாடுகளையும், அரசியல் வாழ்வையும் திறம்பட அமைத்துக் கொண்டுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக செயல்தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் பல நம்பிக்கைக்குரிய இளைஞர்களில் ஒருவராக திகழ்கிறார் என்று பாராட்டி பேசினார்கள்.
ஏற்புரையாற்றிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்பளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு, இந்திய அரசாங்கத்திடம் ISC வைத்துள்ள பொருளாதார உதவி சம்பந்தமான கோரிக்கைகளை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று, திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் உரிய முறையில் எடுத்துச் சொல்லி, இந்திய அரசாங்க நிதி உதவி ISC க்கு வந்தடைய தம்மாலான அனைத்து முயற்சிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.
முன்னதாக ISC அலுவலகத்திற்கு வருகை தந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கெளவரவப்படுத்தும் விதமாக ISC செயலாளர் இருக்கையில் அமர வைத்து சிறப்பு விருந்தினர் வருகைப் பதிவெட்டில் கையெழுத்திட செய்தனர். 40 வருட காலமாக இயங்கிவரும், இந்தியாவின் அனைத்து மாநிலத்தையும் சேர்ந்த உறுப்பினர்களையும் உள்ளடக்கிய ISC யில், தமிழ்நாட்டைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினருக்கு வரவேற்பளிக்கப்படுவது இது இரண்டாம் முறையாகும்.
ISC பொழுதுபோக்கு துறை துணைச்செயலாளர் அப்துல் ஜலீல் நன்றியுரையாற்றினார்.