சச்சின் புகழ் பாடுவதை நிறுத்துங்கள்!: பாக். மீடியாக்களுக்கு தாலிபான் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள டிவி சானல்கள், இந்தியரான சச்சினை புகழ்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தாலிபான் பயங்கரவாத அமைப்பு, எச்சரி்த்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் ஓய்வு பெற்றார். அவருக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது இந்திய அரசு.
கடந்த சில வாரங்களாகவே சச்சின் டெண்டுல்கர் பற்றிய கட்டுரைகளும், அவரது சாதனையைப் பற்றிய சிறப்பு செய்திகளும்தான் டிவி சேனல்களிலும் ஒளிபரப்பாகின.
பாகிஸ்தான் பத்திரிக்கைகளிலும், சச்சின் டெண்டுல்கரைப் பற்றிய கட்டுரைகளும் அதிக அளவில் எழுதப்பட்டன. டிவி சேனல்களிலும் சிறப்பு செய்திகள் ஒளிபரப்பாகின.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் பாக் ஊடகங்களில் முதன்முறையாக இந்தியரைப் பற்றி புகழ்ந்து எழுவது இப்போதுதான் முதன்முறையாகும்.
த எக்ஸ்பிரஸ் டிரிபியூன், டெய்லி டைம்ஸ் போன்ற நாளிதழ்கள் சச்சின் புகழ் பாடியுள்ளன. 100 செஞ்சுரி, 200 டெஸ்ட் போட்டி, 15000 ரன்கள் என யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனைகளை செய்துள்ளார் சச்சின் என உருது பத்திரிக்கை ஒன்றும் கட்டுரை எழுதியுள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தான் ஊடகங்களுக்கு தாலிபான் தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஞாயிறன்று ஏகே.47 துப்பாக்கி சகிதம் நின்று கொண்டு பேசியுள்ள தாலிபன் கமென்டோ, சச்சினை புகழ்வதை பாகிஸ்தான் ஊடகங்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் சிறந்த கிரிக்கெட் வீரர்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் ஒரு இந்தியர் என்பதை பாகிஸ்தான் ஊடகங்கள் மறந்து விட வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
இந்த வீடியோ கவரேஜ் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உலாவருகின்றன.