அணு உலைக்கு அருகே நிலநடுக்கம்.. ஜப்பானில் மக்கள் பீதி.. பாதிப்பில்லை என நிபுணர்கள் தகவல்
ஜப்பானில் இன்று காலை 9.11 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது.
டோக்கியோ : ஜப்பானின் ஃபுகுஷிமாவை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்திய நேரப்படி இன்று காலை 9.11 மணியளவில் வடகிழக்கு ஜப்பான் மற்றும் ஃபுகுஷிமாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் ஹுன்ஷூ தீவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் 5.6 முதல் 5.8 வரை இருந்ததாக அந்த நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது.
எனினும் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. மேலும் ஃபுகுஷிமா டாய் அணுஉலை பாதுகாப்பாக இருப்பதாக அணுஉலை மைய இயக்குனர் கூறியுள்ளார். ஃபுகுஷிமா கடல்பகுதியில் 40 கிமீட்டர் தொலைவில் இந்த நில அதிர்வு உருவாகியுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர்ச்சேதம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
கடந்த மார்ச் 2011ம் ஆண்டு ஜப்பானில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அணுஉலை பாதிக்கப்பட்டது. 1986ம் ஆண்டு செர்னோபைலில் நடந்த அணு விபத்தையடுத்து மிகப்பெரிய அணுஉலை சேதத்தை ஏற்படுத்திய சம்பவமாக இந்த சுனாமி தாக்குதல் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.