தாயின் மரணத்தால் மனநிலை பாதிப்பு... உறவினர்களின் வீடுகளில் சரமாரி துப்பாக்கிச் சூடு ... 8 பேர் பலி!
வாஷிங்டன் : அமெரிக்காவில் தாயின் மரணத்தால் மனநிலை பாதிப்புக்கு ஆளான நபர் ஒருவர், உறவினர்கள் வீடுகளில் புகுந்து அதிரடியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் மிசவுரி பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் ஆல்ரிட்ஜ் (36). சமீபத்தில் இவரது தாயார் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து ஜோசப் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி டைரோன் என்ற இடத்தில் உள்ள தனது உறவினர்களின் வீடுகளுக்குள் அதிரடியாக நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார் ஜோசப். இதில், 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒரு பெண், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின்னர் ஜோசப்பும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப் பட்டது. உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் அவரது உடல் அப்பகுதியில் இருந்த கார் ஒன்றில் இருந்து மீட்கப் பட்டது.
தாயாரின் மரணத்தால் தான் இந்த வெறிச்செயலை ஜோசப் மேற்கொண்டாரா எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால், ‘‘ஜோசப்பின் குடும்பத்தினர் நல்லவர்கள், எல்லோருக்கும் உதவி செய்யும் மனப்பாங்கு படைத்தவர்கள்'' என்று அந்த பகுதியில் வசித்து வருகிற சார்லஸ் சுமித் என்பவர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் குணம் அடைந்த பின்னர், அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்குப் பின்னரே இத்தாக்குதலுக்கான சரியான காரணம் தெரிய வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
சமீபகாலமாக அமெரிக்காவில் தொடர்ந்து வரும் துப்பாக்கி கலாசாரம், அங்குள்ள மக்களிடையே பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்தி வருகிறது.