சிரியா விமான நிலையம் அருகில் பயங்கர குண்டு வெடிப்பு… வன்முறைக்கு பொறுப்பேற்றது யார்?
சிரியா விமான நிலையம் அருகில் பயங்கர குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இதனால் அங்கு கடும் பதற்றம் நிலவி வருகிறது.
டமாஸ்கஸ்: சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால் அங்கு அடிக்கடி வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜிஹாதி குழுவினர் நடத்தும் இந்தப் போராட்டத்தில் சிரியாவின் முக்கிய இடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களுக்கு எதிராகவும் சிரியாவிற்கு ஆதரவாகவும் அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று காலை அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் அருகில் சர்வதேச விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. விமான நிலையத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் நடைபெற்றுள்ள இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
டமாஸ்கஸ் விமான நிலையத்தில் பெரிய அளவிலான குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பதை சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் ராமி அப்தேல் ரஹ்மான் உறுதி செய்துள்ளார். இந்த குண்டு வெடிப்பில் எத்தனை பேர் பலியாகியுள்ளனர் என்பதும் படுகாயம் அடைந்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரமும் இதுவரை தெரியவில்லை.
சிரியாவில் 2011ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் உள்நாட்டுப் போருக்கு 3 லட்சத்து 20 ஆயிரம் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.