15 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட மகனை ஃபேஸ்புக் மூலம் கண்டுபிடித்த தாய்
நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் தனது மகனை 15 ஆண்டுகள் கழித்து கண்டுபிடித்து சேர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹோப் ஹாலேண்ட் என்ற பெண். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அவரின் கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது 3 வயதாக இருந்த மகன் ஜானதனை கடத்திக் கொண்டு மெக்சிகோவுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் 15 ஆண்டுகள் கழித்து ஜானதன் தனது தாயை கண்டுபிடிக்க நினைத்து சிறுவயதில் தன் சகோதரனுடன் எடுத்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். ஃபேஸ்புக்கில் அந்த புகைப்படத்தை கடந்த ஜனவரி மாதம் பார்த்த ஹோப்பால் ஆனந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. புகைப்படத்தை பார்த்த 3 நாட்கள் கழித்து அவர் தனது மகனுடன் செல்போனில் பேசினார்.
நேரில் சந்திப்பது என்று தாயும், மகனும் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த வாரம் ஜானதன் கலிபோர்னியா வந்து தனது தாயை சந்தித்தார். பள்ளிப் படிப்பை முடித்ததும் அவர் கலிபோர்னியா வந்து தாயுடன் இருக்க முடிவு செய்துள்ளார்.
இது குறித்து ஹோப் கூறுகையில்,
ஃபேஸ்புக்கில் இரண்டு சிறுவர்கள் குளிக்கையில் எடுத்த புகைப்படத்தை பார்த்ததும் ஒரு நிமிடம் என் இதயமே நின்றுவிட்டது. அந்த புகைப்படத்தை எடுத்ததே நான் தான். 15 ஆண்டுகள் கழித்து என் மகன் எனக்கு கிடைத்துவிட்டான் என்றார்.