பாகிஸ்தானில் டிவி நேரடி ஒளிபரப்பின்போது சுருண்டு விழுந்த பெண் நிருபர்.. வைரலாகும் வீடியோ
லாகூர்: பாகிஸ்தானை சேர்ந்த ஒரு இளம் பெண் நிருபர் நேரடி ஒளிபரப்பின்போதே சுருண்டு விழுந்து மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பி.டி.ஐ கட்சியின் பெரும் பொதுக்கூட்டம் ஒன்று லாகூரில் நடைபெற்றது. அந்த கூட்ட மேடையின் மேல் உயரத்தில் அமர்ந்தபடி மைக்கை பிடித்து ஆவேசமாக பேசிவந்தார் பெண் நிருபர் இர்ஷா கான்.
பேசிக்கொண்டிருந்தபோது திடீரென வாய் குளறுகிறது. கண்கள் மேல் நோக்கி சொருகுகின்றன. இதையடுத்து தடுமாறி கீழே விழுகிறார். கூட்டம் சுத்தி நின்று என்னவானதோ என பார்க்கிறது. இந்த காட்சி நெஞ்சை பதைபதைக்க செய்வதாக உள்ளது.
இதையடுத்து சக ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அதற்குள் பத்திரிகையாளர் குறித்து வதந்திகள் பரவிவிட்டன. ஆனால் அவர் தற்போது சிகிச்சை பெற்றுள்ளார். மயக்கம் தெளிந்து வீடு திரும்ப ஆயத்தமாகியுள்ளார்.