தொபுக்கென 38,000 அடியிலிருந்து 10,000 அடிக்கு இறங்கிய விமானம்... மயங்கிய பயணிகள்!
சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து ஹார்ட்போர்டு நகருக்கு புறப்பட்டு சென்ற ஜெட் விமானம் ஒன்றில் திடீரென அழுத்த குறைபாடு ஏற்பட்டது. இதனால், அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பீதியடைந்தனர். சில பயணிகள் மயக்கமடைந்தனர்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து ஜெட் ரக விமானம் ஒன்று 75 பயணிகளோடு ஹார்டுபோர்டு நகருக்கு சென்று கொண்டிருந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் அழுத்தக் குறைவு ஏற்பட்டது. இதனால், விமானத்தில் இருந்த 3 பயணிகள் சுயநினைவை இழந்தனர்.
38000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென டைவ் அடித்தவாறு மூன்றே நிமிடங்களில் 10000 அடிக்கு கீழிறங்கியதால், பயணிகள் பயத்தில் உறைந்தனர்.
எனினும் திறமையாக செயல்பட்ட விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார். உடனடியாக பப்பல்லோ விமான நிலையத்தில் விமானம் பத்திரமாகத் தரையிறக்கப் பட்டது.
விமான நிலையத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடல்நிலை பரிசோதிக்கப் பட்டது. இந்தத் தொடர் சம்பவங்களால் பப்பல்லோ விமான நிலையமே பரபரப்புடன் காணப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த விமானத்தில் சென்ற அவசர உதவி செய்யும் செவிலியர் மேரி கன்னிங்கம் கூறுகையில், ‘நான் சுயநினைவிழந்த ஒருவருக்கு சிகிச்சை அளித்தேன். அப்போது மற்றொருவரும் சுயநினைவை இழந்தார். மற்ற பயணிகளும் மயக்கம் வருவது போல் உணர்ந்தனர். நானும், விமான பணிப்பெண்ணும் கூட சிரமத்திற்கு உள்ளானோம். இதனால் நான் கீழே உட்கார்ந்து விட்டேன். மூச்சு விட சிரமப்பட்டேன். தலை சுற்றுவது போல் உணர்ந்தேன்' என்றார்.
விமானத்தில் ஏற்பட்ட இந்த அசாதாரண சூழ்நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட அந்நாட்டு மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம், ‘விமானத்தில் அழுத்த குறைபாடு எதுவும் ஏற்படவில்லை' எனத் தெரிவித்துள்ளது.
எனினும் 38000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென அதில் உள்ள கதவு ஒன்று திறந்து கொண்டதாகவும், அதனாலேயே விமானத்தில் அழுத்த குறைபாடு ஏற்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், நடுவானில் விமானத்தின் கதவு எதுவும் திறக்கப்படவில்லை என கூறியுள்ள ஸ்கைவெஸ்ட் விமான நிறுவனம், இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.