கத்தார்: உணவுப் பொருள் விலை கிடுகிடு உயர்வு.. கை கொடுக்கும் இந்திய உணவுகள்!
-டோஹாவிலிருந்து பெரிச்சிகோவில் கார்த்திக்
டோஹா: கத்தார் மீது சக அரபு நாடுகள் விதித்துள்ள தடையால் அந்த நாடு பெரும் சிக்கலைச் சந்தித்துள்ளது. உணவுப் பொருட்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் உணவு விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
தீவிரவாதத்திற்கு கத்தார் உடந்தையாக இருப்பதாகவும், ஆதரவு தருவதாகவும் கூறி அந்த நாடு மீது சக அரபு நாடுகளான சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை திடீரென தூதரக ரீதியிலான உறவுகளை துண்டித்து விட்டன.
இந்த நாடுகளின் விமான சேவையும் கத்தாருக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வளைகுடா பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. ஆனால் கத்தார் நாடு இந்த தடைக்கு அசைந்து கொடுப்பதாக இல்லை. சமாளித்து வருகிறது.
கத்தாரில் பதட்டம்
அதேசமயம், கத்தாரில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் மத்தியில் ஒரு விதமான பதட்ட நிலை நீடிக்கிறது. வழக்கமாக அசாதாரண சூழல் ஏற்பட்டால் நிலவும் பதட்டம்தான் இது. எனவே நிலைமை கட்டுக்குள்ளேயே இருக்கிறது.
உணவுப் பொருட்கள் பற்றாக்குறை
அதேசமயம், கத்தாரில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. சவூதி உள்ளிடட் நாடுகளிலிருந்து வரும் உணவுகள் நின்று விட்டன.
விலை 3 மடங்கு உயர்வு
இதன் காரணமாக கத்தாரில் பால், காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. பலர் மொத்தமாக வாங்கி ஸ்டாக் வாங்கி வைத்ததால்தான் இந்த விலை உயர்வு என்கிறார்கள்.
ஆட்டுப் பால்
பசும்பால் பற்றாக்குறை இருப்பதால் ஆட்டுப் பாலையும் அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். உள்ளூரில் ஆட்டுப் பால் உற்பத்தி இதனால் அதிகரித்துள்ளதாம்.
இந்தியா கை கொடுக்கிறது
தற்போதைய நிலையில் இந்தியா, ஓமன், ஜோர்டான், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளிலிருந்து பால் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் போதிய அளவில் வந்து கொண்டுள்ளதாம். இதனால் கத்தார் அரசால் நிலையை சமாளிக்க முடிகிறதாம்.
இப்படியே நீடித்தால் சிரமம்தான்
தற்போது நிலைமை பதட்டமாகத்தான் உள்ளது. சமாளிக்க கூடிய வகையிலும் உள்ளது. ஆனால் இது இப்படியே நீடித்தால் நிலைமை சிரமம் என்கிறார்கள்.
கட்டுமானத் தொழில் பாதிப்பு
தற்போது கட்டுமானத் தொழில் சற்று பாதிக்கப்பட்டுள்ளது. காரணம் பல்வேறு பொருட்கள் வராமல் முடங்கிக் கிடப்பதால். இதேபோல மற்ற தொழில்களும் கூட பாதிப்பை சந்தித்து வருகின்றனவாம்.