பிரிட்டனில் கால்பந்து விளையாட்டில் பாலியல் வன்கொடுமை : 560 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கீடு
பிரிட்டனில் கால்பந்து விளையாட்டில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து விசாரித்துவரும் அதிகாரிகள், குற்றத்தில் ஈடுபட்டதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள 250 - க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களையும், பாதிக்கப்பட்ட 560 நபர்களையும் கண்டறிந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 311 கால்பந்து கிளப்கள் மற்றும் விளையாட்டின் அனைத்து வரிசைகளிலும் அங்கம் வகிப்பவர்கள் ஆகியோர் இந்த விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது ஆஃப்ரேஷன் ஹைட்ரன்ட் என்று அழைக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் நான்கு முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள்.
அதில், 96 சதவிகிதம் பேர் ஆண்கள்.
முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் பலர் தங்கள் இளம் பருவத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக புகார் கூறியதை தொடர்ந்து, கடந்தாண்டு இது போன்ற புகார்கள் குறித்து தெரிவிக்க சிறப்பு ஹாட்லைன் வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
என்பிசிசி என்றழைக்கப்படும் தேசிய போலீஸ் தலைமை சபை இந்த விசாரணையை ஒருங்கிணைத்து வருகிறது.