திடீர் உடல் நலக்குறைவால் பாக்.,முன்னாள் அதிபர் முஷரப் மருத்துவமனையில் அனுமதி !
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் பர்வேஸ் முஷரப் (வயது 72). முஷ்ரப் ஆட்சியில் இருந்த காலத்தில் சிவப்பு பள்ளிவாசலில் 2007 இல் அரசுத் தரப்பு படைகளுக்கும் பள்ளிவாசல் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் சுமார் 100 பேர் வரை கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முஷரப் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த நிலையில், இன்று திடீரென அவரது வீட்டில் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக அவர் கராச்சி அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் முஷரப்பின் உடல்நிலை எவ்வித அபாயக் கட்டத்திலும் இல்லை, அவர் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக உடல் நிலையை காரணம் காட்டி பல்வேறு முறை முஷரப் விசாரணையில் இருந்து தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.