பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கொடிகட்டி பறந்த வீரர் இன்று வாடகைக் கார் ஓட்டுநரான அவலம்
சிட்னி : சச்சினின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கொடி கட்டிப் பறந்த வீரர் அர்ஷத் கான், தற்போது ஆஸ்திரேலியாவில் உபேர் கால் டாக்சியை ஓட்டும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அர்ஷத் கான், 1993 முதல் 2006 வரை பாகிஸ்தானுக்காக 58 ஒரு நாள் போட்டி மற்றும் 8 டெஸ்ட் போட்டியில் ஆப்-ஸ்பின்னராக விளையாடியுள்ளார். முக்கியமாக 2006-ல் பெஷாவரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது சச்சின் விக்கெட்டை வீழ்த்தியதால் செய்திதாள்களில் தலைப்பு செய்தியானார்.
ஆனால் கபில்தேவ் நடத்திய சி.சி.எல். அமைப்பில் சேர்ந்து விளையாடிய பிறகு, அர்ஷத் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படவில்லை. இதனால் வறுமையில் வாடிய அர்ஷத் தற்போது ஆஸ்திரேலியாவில் உபேர் நிறுவனத்திற்கு சொந்தமான வாடகை காரை ஓட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஆந்திராவை சேர்ந்த கணேஷ் என்பவர், சிட்னியில் உபேர் கால் டாக்சியில் சென்ற போது, எதிர்பாராத விதமாக தான் அமர்ந்திருக்கும் காரை ஓட்டுவது அர்ஷத் கான் என்பதை கண்டுபிடித்துள்ளார்.
இதை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததால், மீண்டும் செய்திகளில் தலைப்பு செய்தியாகியுள்ளார் அர்ஷத் கான்.