இந்தியா, பாக், ஆப்கானுக்கு புதிய தலைவரை அறிவித்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம்!
இஸ்லாமாபாத்: இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கான ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவராக முன்னாள் தாலிபன் தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம், தெற்கு ஆசியாவில் தங்களுடைய ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த பணியை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவரை அந்த இயக்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தளபதி அபு முகமது அல்-அட்னி பேசும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ''ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் "குராஸன்' பகுதிக்கான தலைவராக, தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முன்னாள் தளபதி ஹபீஸ் சயீத் கான் நியமிக்கப்படுகிறார்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
"குராஸன்' என்பது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவின் சில இடங்கள் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதாக கூறிப்படுகிறது. இந்த அறிவிப்பு இந்தியா மற்றும் சர்வ தேச அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 4 இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டு அதில் சேர்ந்தனர். பெங்களூருவைச் சேர்ந்த பென்பொருள் பொறியாளர் மெக்தி என்பவர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக இணையதளப் பிரச்சாரம் மேற்கொண்டதற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.