அறியாத வயதில் தீவிரவாதம் குறித்துப் பேசும் 8 வயசு பொடியன்.. பிரான்சில் பரபரப்பு!
நைஸ்: தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசியதாக 8 வயது சிறுவனிடம் பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்மாதம் 7 ஆம் தேதி பிரான்ஸ் பத்திரிகை அலுவலகமான சார்லி ஹெப்டோவில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய பயங்கரத் தாக்குதலில், அதன் ஊழியர்கள் 12 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். உலகையே அதிர வைத்தது இந்தத் தாக்குதல் சம்பவம்.
இதில் பலியானவர்களுக்காக பிரான்ஸின் முக்கிய நகரங்களில் ஒன்றான நைஸ் நகரின் தெற்குப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அப்பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுவன் மறுத்துள்ளான்.
அதனைத் தொடர்ந்து அச்சிறுவனின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கத் தொடங்கியுள்ளார் அப்பள்ளி ஆசிரியர். அப்போது, தீவிரவாதிகளுக்கு ஆதரவாக சிறுவனின் நடவடிக்கைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக, இது குறித்து அந்த ஆசிரியர் பள்ளி தாளாளரிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அம்மாணவருக்கும், அவரது தந்தைக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
இருப்பினும் சிறுவன் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. எனினும் பள்ளியிலிருந்து வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சிறுவனின் வழக்கறிஞராக ஆஜரான சபென் குஜ், விசாரணை தொடர்பாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள தகவலின்படி, ‘நீ ஏன் அஞ்சலியில் கலந்து கொள்ளவில்லை என்று விசாரணையின் போது கேட்டதற்கு "நான் தீவிரவாதிகள் பக்கம் இருப்பேன்" என்று சொல்லியிருக்கிறான் அச்சிறுவன். சரி, தீவிரவாதம் என்றால் என்ன என்ற கேள்விக்கு "எனக்கு தெரியாது" என்று பதிலளித்திருக்கிறான்.
நிச்சயமாக அந்த சிறுவனுக்கு தான் என்ன பேசுகிறோம் என்று தெரிந்திருக்காதென்றாலும் எதனால் அவன் இப்படி பேசுகிறான் என்பது போலீசாருக்கும் அவனது தந்தைக்கும் புரியாத புதிராகவே இருக்கிறதாம்.