பேஸ்புக்கில் "லைக்" போட்டு போலீஸிடம் "லாக்" ஆன குற்றவாளி!
நியூயார்க்: அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளி என பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட தனது புகைப்படத்திற்கு லைக் போட்டதன் மூலம் போலீசில் சிக்கியுள்ளார் குற்றவாளி ஒருவர்.
அமெரிக்காவின் காஸ்காதே நகரத்தைச் சேர்ந்தவர் லேவி சார்லஸ் ரியர்டன் (23). வழிப்பறி, திருட்டு என தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த லேவிக்கு, அமெரிக்க நீதிமன்றம் இரண்டு முறை கைது வாரண்ட் பிறப்பித்தது. ஆனால், போலீசில் சிக்காமல் லேவி தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார்.
எனவே, லேவியைத் தேடப்படும் குற்றவாளி என அறிவித்தது போலீஸ். அதோடு தங்களது பிரத்யேகப் பேஸ்புக் பக்கத்தில் லேவியின் குற்றவிபரங்கள், புகைப்படம் மற்றும் அங்க அடையாளங்களையும் வெளியிட்டது.
இந்தப் பக்கத்தைப் பார்க்கும் பொதுமக்கள் மூலமாக லேவி பற்றிய துப்பு கிடைக்கும் என அமெரிக்க போலீசார் நினைத்தனர். ஆனால், அமெரிக்க போலீசாரின் அதிர்ஷ்டம் லேவியே வந்து பொறியில் சிக்கினார்.
பேஸ்புக் பக்கத்தில் தனது புகைப்படத்தை தேடும் குற்றவாளியாக வெளியிட்ட போலீசை கலாய்க்கும் விதமாக, அதற்கு லைக் ஒன்றைப் போட்டுள்ளார் லேவி. இதை சற்றும் எதிர்பார்க்காத போலீஸ், உடனடியாக அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தது.
இதைத் தான் "நுணலும் தன் வாயால் கெடும்" அதாவது தவளையும் தன் வாயால் கெடும்... என முன்னோர்கள் கூறியுள்ளனர்... ஒரு வேளை அமெரிக்க முன்னோர்கள் இதைச் சொல்லவில்லை போலும்!