சீன சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 9 தொழிலாளர்கள் பலி
பெய்ஜிங்: சீனாவில் விஷவாயு தாக்கியதில் சுரங்கத் தொழிலாளர்கள் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சீனாவின் யுனான் மாகாணம், குன்மிங் நகரம் அருகே உள்ளது லியான்மென்க் கிராமம். இங்குள்ள சுரங்கத்தில் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்களை விஷவாயு தாக்கியது. அதில், அங்கிருந்த 21 தொழிலாளர்களும் மயக்கமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மீதமுள்ளவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டது. ஆனால்,சிகிச்சைப் பலனின்றி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விஷவாயுவால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மீதமுள்ள 12 தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.