மலேசிய விமான தகர்ப்பு, இஸ்ரேலின் காஸா வெறியாட்டம்.. பெட்ரோல்- டீசல் விலை உயரும் அபாயம்
சிங்கப்பூர்: உக்ரைன் நாட்டில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், பதற்றத்தின் காரணமாக கச்சா எண்ணை விலை அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே விலைவாசி விண்ணை முட்டும் நிலையில் இந்திய பெருங்குடி மக்கள், டீசல், பெட்ரோல், மண்ணெண்ணை விலை உயர்வையும் சேர்ந்து அனுபவிக்க வேண்டி வரும்போல உள்ளது.
ரஷ்யா மீது பொருளாதார தடை
மலேசிய விமானம் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதன் காரணமாக மேலை நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதிக்க வாய்ப்புள்ளது.
எரிவாயு சப்ளையை நிறுத்தும்
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டால், இதற்கு பதிலாக ரஷ்யாவும் தனது நாட்டு எரிவாயு, எண்ணை வளங்களை சப்ளை செய்வதில் பாரபட்சம் காண்பிக்கும். ஐரோப்பாவுக்கு ரஷ்யா தற்போது அனுப்பிவரும் எரிவாயு நிறுத்தப்படும். இதுபோன்ற காரணங்களால், கச்சா எண்ணை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இஸ்ரேல்-காஸா மோதல்
இதேபோல இஸ்ரேல், காஸா மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையும் கச்சா எண்ணை விலை உயர்வுக்கு காரணமாக வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
கச்சா எண்ணை விலை உயரும்
"பிராந்திய அரசியல் சிக்கல்கள், நிதி சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது" என்று ஐக்கிய ஓவர்சீஸ் வங்கியும் எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகள்தான் கச்சா எண்ணையை அதிகம் ஏற்றுமதி செய்கின்றன. அந்த பிராந்தியத்தை ஒட்டிய பகுதிகளில் நடைபெறும் அடுத்தடுத்த சிக்கலான சம்பவங்கள் கச்சா எண்ணை விலையை கண்டிப்பாக உயர்த்தும் என்றும் அந்த வங்கி தெரிவிக்கின்றது.
விலைவாசி உயரும்
இந்தியாவில் ஏற்கனவே விலைவாசி உயர்வு விண்ணை தாண்டிவிட்டது. இந்நிலையில், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்ந்தால் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். இதைத்தான் தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரி கட்டும் என்று கூறுவார்கள் போல உள்ளது.