போகாதே என்று டாக்டர் கூறியும் விமானத்தை ஓட்டி விபத்துக்குள்ளாக்கிய துணை விமானி
பாரீஸ்: ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் துணை விமானிக்கு விமானத்தை இயக்கும் அளவுக்கு உடல் தகுதி இல்லை என்று மருத்துவர் கூறியதையும் கேட்காமல் அவர் வேலைக்கு சென்று 149 பேர் பலியாக காரணமாகியுள்ளார்.
ஸ்பெயினின் பார்லசிலோனா நகரில் இருந்து ஜெர்மனியில் உள்ள டுசல்டார்ப் நகருக்கு 150 பேருடன் சென்ற ஜெர்மன்விங்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர். விமானத்தை அதனை துணை விமானியான ஜெர்மனியைச் சேர்ந்த ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) வேண்டும் என்றே விபத்துக்குள்ளாக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விசாரணையில் லுபிட்ஸ் பற்றி சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
கேப்டன்
விமானி அறையில் இருந்து கேப்டன் வெளியே சென்றதும் கதவை பூட்டிக் கொண்டார் லுபிட்ஸ். கேப்டன் வந்து கதவை திறக்குமாறு தட்டியும், இன்டர்காம் மூலம் தொடர்பு கொண்டும் லுபிட்ஸ் கண்டுகொள்ளவில்லை. விமானி அறையின் கதவை கேப்டன் கோடாரியால் இடித்தும் திறக்க முடியவில்லை.
லுபிட்ஸ்
விமானி அறையில் தனியாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட லுபிட்ஸ் விமானத்தை பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளாக்கினார். விமானம் மலையில் மோத சில நொடிகளுக்கு முன்பு பயணிகள் அலறியுள்ளனர். ஆனால் லுபிட்ஸோ இறுதிவரை எந்தவித சப்தமும் போடாமல் அமைதியாக இருந்தது தெரிய வந்துள்ளது.
கண்பார்வை கோளாறு
லுபிட்ஸுக்கு கண்பார்வை கோளாறு இருந்துள்ளது. அவர் கண்பார்வை கோளாறு மற்றும் மன அழுத்தத்திற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மர்ம நோய்
லுபிட்ஸ் வெளியே தெரிவிக்காத நோய் ஒன்றுக்கும் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த நோய் பற்றிய விவரங்களை ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்திற்கு தெரிவிக்காமல் மறைத்துவிட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையும் அவர் எந்த நோய்க்காக சிகிச்சை பெற்றார் என்பதை தெரிவிக்க மறுத்துள்ளது.
டாக்டர்கள்
லுபிட்ஸுக்கு விமானத்தை இயக்கும் அளவுக்கு உடல் தகுதி இல்லை என்றும், அவருக்கு விடுப்பு அளிக்குமாறும் கூறி ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்திற்கு டாக்டர்கள் எழுதிக் கொடுத்த கடிதத்தை அவர் கிழித்துப்போட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். அன்றைய தினம் தான் விபத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
சோதனை
லுபிட்ஸின் வீட்டில் சோதனை நடத்தியபோது தான் அவர் மருத்துவர்கள் அளித்த கடிதத்தை கிழித்துப் போட்டது தெரிய வந்தது. மேலும் மனஅழுத்தத்திற்காக அவர் எடுத்துக் கொண்ட மருந்துகளும் கிடைத்தன.