நகர வாழ்க்கையை மேம்படுத்த புதிய நிறுவனம் துவங்கும் கூகுள்
நியூயார்க்: நகரங்களை மேம்படுத்த கூகுள் நிறுவனம் சைட்வாக் லேப்ஸ் என்ற நிறுவனத்தை துவங்க உள்ளது.
நகரங்களை மேம்படுத்த கூகுள் நிறுவனம் சைட்வாக் லேப்ஸ் என்ற நிறுவனத்தை துவங்க உள்ளது என அந்நிறுவன சிஇஓ லாரி பேஜ் கூகுள் பிளஸ்ஸில் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் தன்னிச்சையாக செயல்பட உள்ள அந்த நிறுவனத்தை ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓவும், நியூயார்க் நகர பொருளாதார மேம்பாட்டுத்துறை துணை மேயராகவும் இருந்த டான் டாக்டராப் தலைமை தாங்கி நடத்த உள்ளார்.
இந்நிறுவனம் புதிய தயாரிப்புகளை உருவாக்குவதுடன், நகரங்களில் வாழ ஆகும் செலவு, போக்குவரத்து உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்து தீர்வு காணும். இது குறித்து லாரி பேஜ் கூகுள் பிளஸ்ஸில் தெரிவித்திருப்பதாவது,
இந்த நிறுவனம் கூகுளின் முக்கிய வியாபாரத்தில் இருந்து மாறுபட்டு உள்ளது. புதிய நிறுவனம் மூலம் நகரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தலாம் என்று நான் நம்புகிறேன். உலக மக்களில் பலர் நகரங்களில் வசிக்கிறார்கள், வேலை பார்க்கிறார்கள். அப்படி இருக்கையில் நகர வாழ்க்கையை மேம்படுத்த பல வாய்ப்பு உள்ளது.
இந்த பதிவை பலர் நகரங்களில் இருந்து வாசிக்கக்கூடும். நல்ல வீடு, சிறந்த அரசு போக்குவரத்து, குறைந்த மாசு, அதிக பூங்காக்கள், பாதுகாப்பாக பைக் ஓட்டும் பாதைகள் உள்ளிட்ட பலவற்றை பற்றி நீங்கள் யோசிக்கலாம். உலகின் பல்வேறு நகரங்களில் இந்த வசதிகள் உள்ளன.
இந்நிலையில் நகர வாழ்க்கையை மேம்படுத்த சைட்வாக் லேப்ஸ் நிறுவனம் குறித்து அறிவிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.