ஃபெட்னா 2017: வட அமெரிக்க தமிழ்ப் பேரவை விழா... உலகத் தலைவர்கள் வாழ்த்து
வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30ம் பேரவை விழாவுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துச் செய்திகள் அனுப்பிய வண்ணம் உள்ளனர்.
மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் இந்த ஆண்டின் தமிழ்ப்பேரவை விழா, மினியாபொலிஸ் கன்வென்ஷன் சென்டரில்
வரும் 30ம் தேதி தொடங்குகிறது.
ஜூலை மாதம் 2ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கும் விழாவில் ஏராளமான கலை, இலக்கியம் மற்றும் வரலாற்று நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்த விழாவுக்காக உலகம் முழுவதும் இருந்து முக்கிய தமிழ்ச் சமூக பிரமுகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வருகை தரவுள்ளனர்.
தமிழ்ப் பேரவையின் விழாவுக்கு உலகத் தலைவர்கள் தங்களின் உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணமிருக்கிறார்கள். இது தொடர்பாக வட அமெரிக்க தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"அமெரிக்காவிலுள்ள ஏராளமான தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியமாய்த் திகழ்வது, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையாகும். வட அமெரிக்காவிலிருக்கிற அந்தப் பகுதி தமிழ்ச்சங்கத்தோடு இணைந்து, ஆண்டுதோறும் அமெரிக்கத் தமிழர் விழாவாகத் தன் ஆண்டு விழாவினைக் கொண்டாடி வருகிறது பேரவை.
அதன் தொடர்ச்சியாக, மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும் (Minnesota Tamil Sangam), பேரவையுமிணைந்து இவ்வாண்டுக்கான விழாவினை எதிர்வரும் ஜூலை 1, 2 ஆகிய நாட்களில் மினியாபொலிசு நகரில் நடத்தவிருக்கிறது.
உலகத் தலைவர்கள் வாழ்த்து
இவ்விழாவிற்கு மின்னசோட்டா மாகாண ஆளுநர் மாண்புமிகு மார்க் டேட்டன், தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழநிச்சாமி, மலேசியா பினாங்கு மாகாண துணைமுதல்வர் மாண்புமிகு இராமசாமி, அமெரிக்க செனட்சபை உறுப்பினர் மாண்புமிகு 'மினசோட்டா' அல் ஃப்ரேங்க்கன், கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கெரி ஆனந்தசங்கரி, அமெரிக்கப் பேராய உறுப்பினர் மாண்புமிகு ‘சிகாகோ' இராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய தலைவர்களைத் தொடர்ந்து பல உலகத் தலைவர்கள் வாழ்த்துச் செய்தியினை அனுப்பிய வண்ணம் இருக்கின்றனர்.
தமிழக முதல்வர் வாழ்த்து
தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வசித்தாலும், நமது மொழி, பண்பாடு, மரபுகளை பேணிக்காத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதோடு, அமெரிக்கத் தமிழர்கள் ஒன்று கூடி கடந்த 29 ஆண்டுகளாக தமிழ் விழாவினை தொடர்ந்து நடத்தி வரும் பேரவையின் தமிழ்ப்பணியைத் தாம் உளமாரப் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
மின்னசோட்டா ஆளுநர் வாழ்த்து
மின்னசோட்டா மாகாணத்துக்குத் தொடர்ந்து பெருமை சேர்த்து வரும் உள்ளூர்த்தமிழர்கள், தமிழ்க்கலைகளைப் போற்றுவோம்; தமிழர் மரபை மீட்டெடுப்போமெனும் விழா உள்ளீட்டுக்குச் சிறப்புச் சேர்த்து, வருங்காலத் தலைமுறையினருக்கு உதவிடுவார்களென்பதில் தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாயும் விழா மாபெரும் சிறப்பெய்துமெனவும் தம் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார் மின்னசோட்டா ஆளுநர் அவர்கள்.
மலேசியா பினாங்கு துணை முதல்வர் வாழ்த்து
பேரவையின் வெள்ளிவிழாவில் தாம் பங்கேற்றதை நினைவு கூர்ந்தும், உலகத்தமிழர்களின் விழுமியத்துக்குப் பெருமை சேர்க்கும் ஃபெட்னாவையும் திருவிழாவையும் தாம் அகமகிழ்ந்து பாராட்டுவதாயும் தம் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார் மலேசியா பினாங்கு துணைமுதல்வர் அவர்கள்.
மின்னசோட்டா செனட்டர் வாழ்த்து
புலம்பெயர்ந்து அமெரிக்காவுக்கு வந்திருக்கும் தமிழர்கள் அமெரிக்காவுக்கும் மின்னசோட்டா மாநிலத்துக்கும் சிறப்புச் சேர்ப்பதையெண்ணித் தாம் பெருமைப்படுவதாகவும், பல்லின மக்களின் பண்பாட்டு மேன்மைக்குப் பெருமை சேர்க்கும் விழா வெற்றி பெற வேண்டுமெனத் தாம் நினைத்துப் பாராட்டுவதாகவும் தம் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார் மின்னசோட்டா மாகாணத்துக்கான செனட்டர் அவர்கள்.
கனடா எம்எபி ஆனந்த சங்கரி வாழ்த்து
புலம்பெயர்ந்து வாழும் சூழலில் தமிழர்களின் அரசியற்பங்களிப்பு பெருமைமிக்கதாகவும், அந்தந்த நாட்டுக்குச் சிறப்புச் சேர்ப்பதாகவும் இருப்பதையெண்ணித் தாம் மகிழ்வதாகவும், அத்தகையோரை அழைத்துச் சிறப்பிக்கும் பேரவையின் திருவிழாவுக்குத் தம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, பேரவையுடன் தொடர்ந்து செயற்படத் தாம் ஆவலுடன் இருப்பதாகத் தம் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கெரி ஆனந்தசங்கரி அவர்கள்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.