சபிக்கப்பட்ட குழந்தை.. 9 வருடங்களுக்கு பிறகு வெளியாகிறது ஹாரி பாட்டர் புதிய புத்தகம்
லண்டன்: 9 வருடங்களுக்கு பிறகு ஹாரி பாட்டர் சீரிஸ் புத்தகம் இவ்வாண்டு வெளியாக உள்ளது என்ற தகவல் வாசகர்களை குதுகலிக்க செய்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர், ஜே.கே.ரவ்லிங் எழுதிவரும் ஹாரிபாட்டர் என்ற பெயரிலான புத்தகங்கள் உலகமெங்கும் உள்ள வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
1997ம் ஆண்டு 'ஹாரிபாட்டர் அன்டு பிளாசபர் ஸ்டோன்' என்ற பெயரில் வெளியான ஹாரிபாட்டர் நாவல்தான் இந்த சீரிசின் முதல் நாவலாகும். இது உலகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
விற்பனை அபாரம்
1998ம் ஆண்டு ஹாரிபாட்டர் அன்டு சேம்பர் ஆப் சீக்ரெட்ஸ் என்ற பெயரிலும், அதற்கு அடுத்த ஆண்டான, 1999ல், ஹாரிபாட்டர் அன்டு பிரிசனர் ஆப் அஸ்கபான் என்ற பெயரிலும் நாவல் எழுதி அவையும் விற்பனையில் சக்கைபோடு போட்டன.
9 வருடங்களுக்கு பின்
2000, 2003, 2005ம் ஆண்டுகளில் அடுத்தடுத்த ஹாரிபாட்டர் நாவல்களை ரவ்லிங் வெளியிட்டார்., கடைசியாக 2007ம் ஆண்டு ஹாரிபாட்டர் அன்டு டெத்லி ஹலோவ்ஸ் என்ற பெயரில் நாவல் வெளியிட்டிருந்தார் ரவ்லிங். இதன்பிறகு 9 ஆண்டு இடைவேளைக்கு பிறகு இந்த ஆண்டு 8வது ஹாரிபாட்டர் நாவல் வெளியாகிறதாம்.
சபிக்கப்பட்ட குழந்தையாம்
வரும் ஜூலை 31ம் தேதி, 'ஹாரிபாட்டர் அன்டு கர்ஸ்ட் சைல்ட்' (ஹாரிபாட்டரும் சபிக்கப்பட்ட குழந்தையும்) என்ற பெயரில் நாவல் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு உலகமெங்கும் உள்ள ஹாரிபாட்டர் நாவல் வாசிப்பாளர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆன்லைனிலும் விற்பனை
இங்கிலாந்தின் லிட்டில் பிரவுன் நிறுவனம் புத்தகத்தை வெளியிடுகிறது. ஆன்லைனிலும் புத்தகம் விற்பனை நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது. ஹாரிபாட்டர் சீரிஸின் முதல் புத்தகம் வெளியாகி அடுத்த ஆண்டோடு 20 ஆண்டுகள் நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.