ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கையில் "மஸ்டர்ட் கேஸ்"... அமெரிக்கா தரும் ஷாக் ரிப்போர்ட்
நியூயார்க்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மஸ்டர்ட் கேஸ் எனப்படும் வேதி ஆயுதத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தீவிரவாத அமைப்பாக வளர்ந்து வருகிறது ஐஎஸ் ஐஎஸ். வெவ்வேறு நாடுகளில் இருந்தும் ஆட்களைத் திரட்டி தனது பலத்தை அதிகரித்து வருகிறது இந்த அமைப்பு
சமீபத்தில் இந்த தீவிரவாத அமைப்பிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த அமைப்பு மஸ்டர்ட் கேஸை தனது ஆயுதமாக பயன்படுத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மஸ்டர்ட் கேஸ்...
கடந்த வாரம் ஈராக்கில் குர்தி வீரர்களுக்கு எதிராக ஐஎஸ் தீவிரவாதிகள் இந்த மஸ்டர்ட் கேஸ் தாக்குதலை நடத்தியதாகவும், இவை சிரியாவில் இருந்து பெறப்பட்டவை என்றும் அமெரிக்கா கூறுகிறது.
அமெரிக்கா தடை...
கடந்த 1993ம் ஆண்டே மஸ்டர்ட் கேஸுக்கு அமெரிக்கா தடை விதித்தது. தற்போது இதை ஆயுதமாக ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளது அமெரிக்கா.
தொண்டையில் காயம்...
ராக்கெட்டுகளில் மஸ்டர்ட் கேஸை நிரப்பி அதனை எதிராளிகள் மீது தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பெரும்பாலான வீரர்களுக்கு தொண்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதல் உலகப்போர்...
மஸ்டர்ட் கேஸ் என்பது சல்பர் மஸ்டர்ட் என்ற வேதிப்பொருள் ஆகும். கடுகின் மணத்துடன் இருப்பதால் இதற்கு கடுகு வாயு எனவும் பெயர். இது சுவாசம், கண் மற்றும் தோல் வழியாக உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும். முதலாம் உலகப்போரில் மஸ்டர்ட் கேஸ் தாக்குதல் நடத்தி அதிகப்படியான வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
நிரந்தர உடல் ஊனம்...
இந்த கேஸ் தாக்குதலுக்கு ஆளான நபருக்கு உடனடியாக எந்தவித பாதிப்பும் ஏற்படாது. சுமார் 12 மணி நேரங்களுக்குப் பிறகு தாக்குதலின் வீரியம் தெரிய ஆரம்பிக்கும். இந்த வாயுவால் உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றாலும், நிரந்தர உடல் ஊனம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்வை இழப்பு...
பெரும்பாலும் மஸ்டர்ட் கேஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள் பார்வை இழப்பு மற்றும் சுவாசப் பிரச்சினைகளுக்கு ஆளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.