என்ன கொடுமை இது... ?
பெய்ரூட்: சிரியாவிலிருந்து ஒரு மனதை உலுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சிரியாவின் எதிர்க்கட்சிகள் இந்த உலுக்கும் புகைப்படத்தையும், அதுதொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். ஒரு சிறுவனின் படம் அது. கடலோரம் உயிற்ற உடலாய் வீழ்ந்து கிடந்த அய்லானின் உடல் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே அளவிலான பாதிப்பை இந்த சிறுவனின் படத்தைப் பார்க்கும்போது மனது பதை பதைக்கிறது.
அலெப்போ நகரில் நடந்த விமானத் தாக்குதலில் நொறுங்கிப் போன கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி மீட்கப்பட்ட ஒரு சிறுவன் அமர்ந்திருக்கும் படம்தான் அது. உடம்பு முழுக்க தூசியும், குப்பையும் படர்ந்திருக்க ஒரு இருக்கையில் அமர வைக்கப்பட்டுள்ளான் அந்த சிறுவன். அவனது முகத்தில் ரத்தக் கறை படிந்திருக்கிறது. எப்படிப்பட்ட மோசமான நிலையில் அவனது நாடும், ஊரும் இருக்கிறது என்பதை அந்தப் படத்தின் மூலமாக புரிந்து கொள்ள முடியும்.
அலப்போ நகரம் ஏற்கனவே சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. அங்கு இருப்பவர்கள் ஒவ்வொரு நொடியையும் எப்படிப்பட்ட நிலையில் கடக்கிறார்கள் என்பதை இந்தப் படம் வெளிக்காட்டுகிறது. இந்த சிறுவனின் பெயர் தக்னீஷ். 5 வயதாகிறது. இந்த சிறுவனை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததாக டாக்டர் ஒசாமா அபு அல் எஸ் கூறியுள்ளார். இவன் வசித்து வந்த குவாதர்ஜி என்ற இடத்தில் நடந்த விமானத் தாக்குதலில் இந்த சிறுவனின் வீடு தரைமட்டமாகியுள்ளது.
இவனுக்கு தலையில் அடிபட்டுள்ளது. இருப்பினும் மூளையில் பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. மீட்டு வந்து உட்கார வைத்ததும் அந்த சிறுவன் தனது உடலில் பட்டுள்ள ரத்தத்தைப் பார்க்கிறான். தனது முகத்தில் வழியும் ரத்தத்தை கையால் துடைக்கிறான். பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் தான் அமர்ந்துள்ள இருக்கையில் துடைக்கிறான்.
No child deserves to grow up in war. Photo of Syrian child who survived Aleppo bombings. pic.twitter.com/x7fckBJRRk
— Teymour (@Teymour_Ashkan) August 18, 2016
சிகிச்சைக்குப் பின்னர் இந்த சிறுவன் வீடு திரும்பியுள்ளான். மீட்கப்பட்ட இடத்தில் உட்கார வைத்திருந்தபோதுதான் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறுவன் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிலும் ஏராளமான இறந்த உடல்கள் கிடந்ததாக புகைப்படக் கலைஞர் முகம்மது ரஸ்லான் கூறியுள்ளார்.
இதேபோல மேலும் சில சிறார்களையும் அங்கு மீட்டு அமர வைப்பது போல வீடியோவில் காட்சி உள்ளது. ஓடியாடி மகிழ்ந்திருக்க வேண்டிய சிறுவர்கள் இந்த நிலையிலா.. சிரியாவில் என்று திரும்பும் அமைதி?