நார்வேயில் 13 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது
பெர்ஜன்: நார்வே நாட்டில் 13 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நார்வே நாட்டின் கல்பாக்ஸ் எண்ணெய் வயலில் இருந்து இன்று பெர்ஜன் நகருக்கு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. அதில் 11 ஊழியர்கள் உள்பட 13 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த ஹெலிகாப்டர் டியூராய் தீவுக்கு அருகே பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டர் விழுந்தபோது பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், அதில் இருந்து கரும்புகை எழுந்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இதையடுத்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்த விபத்தில் ஒருவர்கூட உயிர்பிழைத்திருப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால் உயிரிழப்புகள் பற்றி உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.