புதின் ஏன் ஐஎஸ் தலைவர் பாக்தாதியை விட்டுவிட்டு ஜிஹாதி ஜானை குறி வைத்துள்ளார்?
மாஸ்கோ: சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை அழிக்க சூளுரை எடுத்துள்ள ரஷ்யாவின் முதல் குறி பல கொலைகளை செய்த தீவிரவாதி ஜிஹாதி ஜான் தான்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜிஹாதி ஜான் அவரது நாடு மற்றும் அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளி. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு சார்பில் அவர் பல படுகொலைகளை செய்துள்ளார். அதனால் தான் ரஷ்யா ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பாக்தாதியை விட்டுவிட்டு ஜிஹாதி ஜானை தனது முதல் குறியாக வைத்துள்ளது.
ஜிஹாதி ஜானை யார் கொல்கிறார்களோ அது தான் பெரிய வெற்றியாக கருதப்படும். இத்தனை பயங்கரமான ஜிஹாதி ஜான் சிரியாவில் தான் இருப்பதாக உளவு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்கத் தான் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஜானை உயிருடன் பிடிக்குமாறு ரஷ்ய அதிபர் புதின் தன் நாட்டு படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜானின் உண்மையான பெயர் முகமது இம்வாசி. அவர் பலரின் தலையை துண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோக்களால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மக்கள் அதிர்ந்துள்ளனர். ஜிஹாதி ஜானை விரைவில் பிடிப்போம் என்று முதலில் தெரிவித்தவர்களில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூனும் ஒருவர்.
சிரியாவில் ரஷ்யா போராடுவது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திற்கு பிடிக்கவில்லை. ஆனால் ரஷ்யாவோ தீவிரவாதிகளுக்கு எதிராக உண்மையான போர் நடத்துவதாகவும் ஒரே நாளில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் 49 இடங்களை குண்டு வைத்து தாக்கியதாகவும் தெரிவித்துள்ளது.
சிரியாவில் உள்ள ஆசாத் அரசுக்கு ஆதரவளிப்பதில் தான் ரஷ்யா ஆர்வமாக உள்ளது என்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிராக போராட வருமாறு ரஷ்யாவை சிரியா அழைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜான் அல்லது பாக்தாதியை ரஷ்யா கொன்றுவிட்டால் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வருவதாக பெருமையாக கூறி வரும் அமெரிக்காவுக்கு அது சங்கடமாகிவிடும்.