அமெரிக்க அதிபர் தேர்தல் : தொடர்ந்து 3 விவாதங்களிலும் ஹிலரி "ஹாட்ரிக்" வெற்றி!
லாஸ் வேகஸ்(யு.எஸ்): நவம்பர் 8ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலரி க்ளிண்டனுன், டொனால்ட் ட்ரம்பும் பங்கேற்ற மூன்றாவது இறுதி விவாதத்திலும் ஹிலரி க்ளிண்டன் வெற்றி பெற்றுள்ளார்.
சி.என்.என் / ஓ ஆர் சி நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் ஹிலரி சிறப்பாக பேசியதாக 52 % சதவீதம் பேரும், ட்ரம்புக்கு ஆதரவாக 39 சதவீதம் பேரும்
வாக்களித்துள்ளார்கள்.
முன்னதாக நடைபெற்ற இரண்டு அதிபர் வேட்பாளர் விவாததங்களிலும் ஹிலரி க்ளிண்டன் வெற்றி பெற்றதாக அனைத்து ஊடகங்களும் அறிவித்து இருந்தன.
இறுதி விவாதத்தில் ஹிலரி வெற்றிப் பெற்றுள்ளதாக சி.என்.என் தொலைக்காட்சி முதலில் அறிவித்துள்ளது, மற்ற ஊடகங்களின் கணிப்பும் விரைவில் வெளியாகும்.
ஊடகங்கள் அனைத்தும் ஹிலரிக்கு ஆதரவாக செயல்படுகின்றன என்று ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இன்றைய விவாதத்திலும் அதைக் குறிப்பிட்டார்.
இரண்டு கட்சியிலும் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் முடிவான பிறகு, ஊடகங்கள் மீது ட்ரம்புக்கு ஆதரவாக செயல்படுவதாக ஹிலரி குற்றம் சாட்டியிருந்தார் (ஒன் இந்தியாவிலும் அது பற்றிய செய்தி வெளியிட்டு இருந்தோம்).
ட்ரம்பின் தவறான தகவல்களை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. பொய்யும் புரட்டுமாக உண்மைக்கு புறம்பான தகவல்களைச் சொல்கிறார். ஆனால் ஊடகங்கள் அது குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வராமல் மூடி மறைக்கின்றன என்பது ஹிலரியின் குற்றச்சாட்டாகும்.
ட்ரம்ப், ஊடகங்கள் தனக்கு எதிராக செயல்படுகின்றன. இந்த அதிபர் தேர்தலை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் நகர்த்திக் கொண்டு செல்லும் முயற்சி நடக்கிறது. ஹிலரியை அதிபராக்குவதன் மூலம் பலன் அடைய திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்று தற்போது ட்ரம்ப் குற்றம் சாட்டுகிறார்.
முதல் இரண்டு விவாதத்திலும் நான்தான் வெற்றி பெற்றேன். ஊடகங்கள் உண்மயை மறைத்து ஹிலரி வெற்றி பெற்றதாக அறிவித்தனர் என்றெல்லாம பழி சுமத்தி வருகிறார்.
துணை அதிபர் தேர்தலில் ஹிலரியுடன் போட்டியிடும் டிம் கெய்னை, ட்ரம்பின் சகாவான மைக்பென்ஸ் வென்றார் என்று அனைத்து ஊடகங்களும் வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் விவாதம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டு மக்களிடம் நேரடியாக பேசும் வாய்ப்பு என்பதால், வேட்பாளர்கள் சிரத்தையுடன் தயார் செய்து வந்து விவாதிக்கிறார்கள்.
அதிபர் தேர்தல் விவாதத்திற்கு என தனியாக Commision on Presidential Debates என்ற லாப நோக்கற்ற அமைப்பு, ஒவ்வொரு தேர்தலிலும் ஏற்பாடுகளை செய்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களின் செய்தியாளர்கள், விவாதத்தின் நெறியாளர்களாக பங்கேற்கிறார்கள்
இன்றைய விவாதத்தை நெறிப்படுத்திய க்ரிஸ் வாலஸ், ஃபாக்ஸ் தொலைக்காட்சியைச் சார்ந்தவர். புள்ளி விவரங்களோடு கேள்விகளை அடுக்குவதில் வல்லவர். ட்ரம்ப். ஹிலரி இருவரையுமே பல சிக்கலான கேள்விகள் கேட்டு திணறடிக்க வைத்தார் வாலஸ்.
அதிபர் தேர்தலின் முக்கிய கடைசி நிகழ்வான இறுதி விவாதமும் முடிந்து விட்டது. பல மாநிலங்களில் முன் வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. நவம்பர் 8ம் தேதி இரவு அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும்.
- அமெரிக்காவிலிருந்து நமது செய்தியாளர்