ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க தலைவர் சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது அமெரிக்கா!
வாஷிங்டன்: இந்தியாவுக்கு எதிராக காஷ்மீரில் தாக்குதல்களை அரங்கேற்றி வரும், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதி என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு நாசவேலைகளை திட்டமிட்டு செயல்படுத்தி வரும் அமைப்பு ஹிஸ்புல் முஜாஹிதீன். இதன் தலைவராக இருப்பவர் சலாவுதீன்.
பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களுடன் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளை ஊடுவுறுவச் செய்து தாக்குதல்களை அரங்கேற்றி வந்த சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என இந்திய வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில் சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் அமைதியான முறையில் தீர்வு காண நினைக்கும் மத்திய அரசின் முயற்சிகளை தடுக்க தற்கொலைப்படை தீவிரவாதிகளை அங்கு அனுப்புவோம். இந்திய ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தி அப்பகுதியை சுடுகாடாக மாற்றுவோம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சலாவுதீன் மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடக்தக்கது.