"தயவு செய்து போரை நிறுத்துங்கள்; எங்களை வாழ விடுங்கள்"- சிரிய சிறுவனின் கதறல் குரல்!
லண்டன்: சிரியாவில் 13 வயது சிறுவன் ஒருவன் எங்களை நாட்டை விட்டு துரத்தாதீர்கள்...போரை நிறுத்துங்கள் என்று கூறியுள்ள கருத்து படுவேகமாக பரவி வருகின்றது.
சிரியாவில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக ஐரோப்பாவிற்கு சென்று தஞ்சம் புகுவதற்காக லட்சக்கணக்கான அகதிகள் கடல் வழியாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது.
இந்த பாதுகாப்பற்ற பயணத்தினால் ஐரோப்பிய நாடுகளுக்குள் வாழ வழி கிடைக்குமா என அறிவதற்கு முன்னே பலர் மடிந்து கொண்டிருக்கின்றனர்.
சிறுவனின் வார்த்தைகள்:
இத்தகைய அவலங்களுக்கு ஆளான சிரியா நாட்டுச் சிறுவன் சொல்லியிருக்கும் வார்த்தை பிரிட்டனின் தலையீடு தொடர்பான முடிவை மாற்ற வேண்டிய வகையில் அமைந்துள்ளது.
ஆதரிக்கும் ஐரோப்பா மக்கள்:
ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளிலிருந்து நுழையும், அகதிகளால் ஐரோப்பிய நாடுகளுக்கு சமீப காலமாக பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. அங்கே அகதிகள் நுழைவதை தடுத்த வேளையில் ஐரோப்பிய மக்கள் அகதிகளை ஆதரிக்க முடிவெடுத்து அவர்களை சமீபத்தில் வரவேற்கத் தொடங்கினர்.
போரை நிறுத்துங்க ப்ளீஸ்:
இதனிடையே 13 வயது இந்தச் சிறுவனின் கருத்து உலக ஊடகங்கள் மற்றும் அரசுகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. "எங்கள் நாட்டை விட்டு, ஐரோப்பாவில் குடியேற நாங்கள் ஆசைப்படவில்லை. போரை நிறுத்துங்கள்! அதுதான் எங்கள் நாட்டிலிருந்து எங்களை வாழ முடியாமல் துரத்தி அடிக்கிறது" என்று அவன் கூறியுள்ளான்.
ராணுவப் படைகள் பற்றிய கேள்வி:
கடந்த 2013 ஆம் ஆண்டு நாடளுமன்றத்தில் சிரியாவின் இந்தப் பிரச்சனையை தடுக்க அந்நாட்டுக்குள் ராணுவப் படைகளை அனுப்புவதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது அந்த கருத்து பெரும்பாலானோரால் ஆதரிக்கப்படவில்லை. ஏற்கனவே, லிபியா மற்றும் ஈராக்கில் ராணுவப் படைகளை அனுப்பியபோது அது அங்கிருக்கும் பிரச்சனைகளுக்கு முறையான தீர்வு காண கைகொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.