கருப்பு பண திமிங்கலங்களை அம்பலப்படுத்திய ஹெச்.எஸ்.பி. முன்னாள் ஊழியருக்கு 5 ஆண்டு சிறை
ஜெனிவா: சுவிட்சர்லாந்தின் ஜெனிவா ஹெச்.எஸ்.பி. வங்கி கிளையில் கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்களின் பட்டியலை திருடி வெளியிட்டு இந்தியா உட்பட உலக நாடுகளை அதிர வைத்த அதன் முன்னாள் ஊழியர் ஹெர்வி ஃபால்சியானிக்கு சுவிஸ் நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
பிரான்ஸ் மற்றும் இத்தாலி குடியுரிமை பெற்றவர் ஹெர்வி ஃபால்சியானி. சுவிஸ் ஜெனிவா ஹெச்.எஸ்.பி. வங்கி கிளையில் ஊழியராக பணியாற்றிய போது அந்த வங்கியில் கருப்புப் பணம் பதுக்கிய பல நாட்டவரது பட்டியலை திருடி பிரான்ஸிடம் ஒப்படைத்தார். அந்த தகவல்கள் அவ்வப்போது ஊடகங்கள் மூலம் வெளியாகி பரபரப்பு கிளம்பும்.
இவர் திருடி வெளியிட்ட அந்த பட்டியலின் அடிப்படையில்தான் இந்திய அரசும் தற்போது கருப்பு பண விசாரணைகளை நடத்தி வருகிறது. இதனிடையே ஹெர்வி ஃபால்சியானி மீது வங்கி கணக்கு விவரங்களை பகிரங்கப்படுத்தியது தொடர்பாக சுவிஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணையில் ஹெர்வி ஃபால்சியானி ஆஜராக மறுத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு சுவிஸ் நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.