செத்துப் போவதற்குப் பேசாமல் செவ்வாய்க்குப் போய் விடலாம்.. அதிரடி அமெரிக்கர்
நியூயார்க்: செவ்வாயில் சென்று குடியேறப் போகும் நூறு பேரில் ஒருவர் தான் அமெரிக்காவைச் சேர்ந்த சோனியா வேன் மீட்டர். இன்னும் சில வருடங்களில் இவருக்கு பிரியாவிடைக் கொடுக்க அவரது குடும்பம் தயாராகி வருகிறது.
அமெரிக்காவின் விர்ஜூனியா மாகாணத்தைச் சேர்ந்தவர் சோனியா வேன் மீட்டர் (36). இவரது கணவர் பெயர் ஜேசன் ஸ்டான்போர்ட்.
சோனியா செவ்வாயில் நிரந்தரமாகக் குடியேறப் போகும்100 பேரில் ஒருவராக தேர்வாகியுள்ளார். இது ஒரு வழிப்பயணம் ஆகும்.
ஆராய்ச்சி...
செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா? என்று இந்திய நாட்டு விஞ்ஞானிகள் உள்பட உலக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் மனித காலனியை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
மார்ஸ் ஒன்...
நெதர்லாந்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனமான ‘மார்ஸ் ஒன்' அமைப்பு இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வினோத பயணத்திற்கு 3 சுற்று சோதனைகளுக்குப் பிறகு 50 ஆண்கள் மற்றும் 50 பெண்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
50 பெண்கள்...
இந்த ஐம்பது பெண்களில் ஒருவர் தான் அமெரிக்காவைச் சேர்ந்த சோனியா. இவர் இன்னும் சில ஆண்டுகளில் செவ்வாய்க்கு பறக்க இருக்கிறார்.
பெருமை...
இந்நிலையில், தனது மனைவி சோனியா செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்வதை எண்ணி பெருமிதம் தெரிவித்துள்ளார் அவரது கணவர். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நினைத்துப் பார்க்கவே பெருமையாக இருக்கிறது.
ஹேப்பி...
என் மனைவி புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் சில வருடங்களிலேயே இறந்து போவதைக் காட்டிலும், வேற்று கிரகத்தில் வாழ்கிறார் என்பதைக் கற்பனை செய்து பார்த்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது.
என் மனைவியைப் பற்றியே...
பூமியில் உள்ள ஒவ்வொருவரும் என் மனைவியைப் பற்றித் தான் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்' என அவர் தெரிவித்துள்ளார்.
பயிற்சி...
அடுத்தாண்டு முதல் சோனியாவிற்கு விண்வெளியில் வசிப்பதற்கான பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளன. 24 மணி நேரமும் அவர் விண்வெளி வீரர்களுடன் செலவிட வேண்டும்.
தேவதை ஆகலாம்...
‘ஒருவேளை அவள் அடுத்தகட்ட சுற்றுகளில் தேர்வாகாமல் போகலாம். அல்லது செவ்வாய்க்கு சென்று அங்கேயே அவள் ஒரு தேவதையாக வாழலாம்' என தனது மனைவியின் பிரிவு குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
நான்கு நான்கு பேராக...
மார்ஸ் ஒன் திட்டப்படி 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சப்ளை மிஷன் கிளம்புகிறது. 2018ம் ஆண்டு குடியேற்ற ரோவர் அனுப்பப்படும். 2026ம் ஆண்டு முதலில் 4 பேரை செவ்வாய்க்கு அனுப்பவுள்ளனர். அதன் பின்னர் 2 ஆண்டுக்கு ஒருமுறை நான்கு நான்கு பேராக அனுப்பவுள்ளனர்.