கட்டியவனையும், காதலித்தவனையும் கொன்று புதைத்த பெண்மணி.. சுயசரிதை வெளியிட்டார்!
வியன்னா: கணவரையும், காதலரையும் கொலை செய்து புதைத்து அதற்காக ஆயுள் தண்டனை பெற்று சிறையில் கழித்து வரும் ஆஸ்திரியப் பெண் தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளார்.
ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த கரன்ஸா என்ற பெண் ஐஸ்கீரிம் கடை ஒன்றை நடத்தி வந்தார். இவர் தனது கணவரை 2008 ஆம் ஆண்டும், காதலனை 2010 ஆம் ஆண்டிலும் சுட்டுக் கொலை செய்து தனது ஐஸ்கிரீம் பார்லரில் புதைத்துவிட்டார்.
இவரது கணவர் விவாகரத்து பெற்ற பின்னும் வீட்டை விட்டு செல்ல மறுத்ததால், அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றதாகவும், மேலும் அவரது காதலன் குடித்து விட்டு வருவதாகக் கூறி அவரையும் கரன்ஸா துப்பாகியால் சுட்டுக் கொலை செய்தார்.
பின்னர் உடல்களை தனது ஐஸ்கீரிம் பார்லரில் புதைத்துவிட்டு, மூன்றாவதாக நபர் ஒருவருடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தார். ஆனால் புதைக்கப்பட்ட உடல்களை அவரது பார்லரில் பணிபுரிபவர் பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து போலீசார் கரன்ஸாவை கைது செய்து விசாரணை நடத்தி, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி கரன்ஸாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது சிறையில் அடைபட்டுள்ள கரன்ஸா, தனது வாழ்க்கைக் கதையை புத்தமாக வெளியிட்டுள்ளார். My Two Lives, The True Story of the Ice Lady என்ற பெயரில் அந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதில் தான் ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கிக் காத்திருப்பதாக கூறியுள்ளார் கரன்ஸா.
ஆனால் கரன்ஸா வெளியே வந்தால், வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் கொலை செய்யத் தயங்க மாட்டார் என்று மன நலநிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.