மோடி உள்ளிட்ட 31 உலக நாடுகளின் தலைவர்களின் ரகசிய தகவல்கள் கசிவு
சிட்னி: 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி உள்ளிட்ட 31 உலக நாடுகளின் தலைவர்களின் சொந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
2014ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் ஜி20 மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ரஷ்ய அதிபர் புதின், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் உள்ளிட் 31 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் மாநாட்டில் கலந்து கொண்ட 31 தலைவர்களின் பிறந்த தேதி, பதவியின் பெயர், பாஸ்போர்ட் எண், விசா விவரம் மற்றும் சில தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய பைலை ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை ஊழியர் ஒருவர் தவறுதலாக ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்துபவர்களில் ஒருவருக்கு இமெயில் மூலம் அனுப்பி வைத்துவிட்டார்.
உலக தலைவர்களின் விவரங்கள் தனக்கு தவறுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று இமெயிலை பெற்றவர் தெரிவித்த பிறகே அந்த ஊழியருக்கு தான் செய்த தவறு தெரிய வந்துள்ளது.
இந்த தகவல்கள் கசிந்த விவரம் குறித்து சம்பந்தப்பட்ட உலக தலைவர்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்று குடியேற்றத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்படி நடந்த சம்பவம் பற்றி அந்த 31 தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.