ஸ்பெயினில் வெங்கையா நாயுடுவின் பை திருட்டு: பாஸ்போர்ட் சாலையில் கிடந்தது!
பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவின் கைப்பை மர்மநபர்களால் நேற்று திருடப்பட்டது. பின்னர், சாலையில் கிடந்த அவரது பாஸ்போர்ட் மட்டும் கண்டுபிடிக்கப் பட்டது.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான வெங்கையா ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவிற்கு சென்றிருந்தார். அங்கு ஒரு ஓட்டலில் தங்கி இருந்த வெங்கையா நாயுடு, நாடு திரும்புவதற்காக நேற்று அறையைக் காலி செய்து விட்டு வரவேற்பறையில் காத்திருந்தார்.
அப்போது, அவரது மொத்த பொருட்களில் ஒரு கைப்பை மட்டும் காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அந்த கைப்பையில் தான் அவரது பாஸ்போர்ட், லேப்டாப், கிரெடிட் கார்டு உள்ளிட்ட முக்கிய பொருட்கள் இருந்தன.
திருடு போன தகவலறிந்து பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஓட்டல் அருகே சாலையில் வெங்கையா நாயுடுவின் பாஸ்போர்ட் கண்டு பிடிக்கப் பட்டது.
ஆனால், வெங்கையா நாயுடுவின் கைப்பை, மற்றும் அதிலிருந்த லேப்டாப் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவை திரும்ப கிடைக்கவில்லை.
அதோடு, திருடு போன கைப்பையில் வெங்கையா நாயுடுவினுடன் சென்றிருந்த மற்றொரு உயர் அதிகாரியின் பாஸ்போர்ட்டும் இருந்துள்ளது. வெங்கையா நாயுடுவின் பாஸ்போர்ட்டை தூக்கி வீசிய திருடன், அந்த அதிகாரியின் பாஸ்போர்ட்டை மட்டும் எடுத்துச் சென்றுள்ளான்.
இதனால், இந்தியத் தூதரக அதிகாரி மூலம் உடனடியாக எமர்ஜென்சி பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து அந்த அதிகாரியை இந்தியா அழைத்து வந்துள்ளார் வெங்கையா நாயுடு.
இச்சம்பவம் தொடர்பாக வெங்கையா நாயுடு கூறுகையில், ‘எனது பாஸ்போர்ட்டை மட்டும் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் திருடன் சாலையில் வீசிச் சென்றுள்ளான். ஆனால், எனது லேப்டாப் மற்றும் கிரெடிட் கார்டு திரும்பக் கிடைக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளிடம் பர்ஸ் மற்றும் உடைமைகளைத் திருடும் பிக்பாக்கெட் திருடர்கள் அதிகம் காணப்படும் சுற்றுலா தளங்களில் பார்சிலோனாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.