எல்லை பிரச்சனை தற்காலிகமான ஒன்று... சொல்கிறார் சீனா வெளியுறவு அதிகாரி
இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனை தற்காலிகமான ஒன்றுதான். அதனைக் கண்டுகொள்ள தேவையில்லை என்று சீன வெளியுறவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங்: இந்திய சீன எல்லைப்பகுதியில் போர்ப் பதற்றம் நிலவிவரும் வேளையில், சீன வெளியுறவு அதிகாரி ஒருவர் இந்திய சீன எல்லையில் தற்போது எழுந்துள்ள பிரச்சனை தற்காலிகமான ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார்.
சிக்கிம் மாநிலத்தில் இந்திய சீன எல்லைப் பகுதியில் உள்ள டோக்லாம் பகுதியை ஒட்டி சீனா சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்திய ராணுவம் அதிரடியாக வீரர்களை குவித்தது.
இதில் ஆவேசமடைந்த சீனா, இதற்கு பதிலடியாக டோக்லாம் பகுதி தங்களுக்குச் சொந்தமானது என கூறி ஏராளமான ராணுவ வீரர்களை எல்லையில் குவித்தது. இதனால் அந்தப் பகுதியில் போர் மேகம் சூழந்தது.
மோடி-சீன அதிபர் சந்திப்பு
இரு நாடுகளின் இந்த ராணுவ நடவடிக்கைகள் எல்லையில் திடீர் போர்ப் பதற்றத்தை உண்டாக்கியது. அது மட்டுமல்லாமல் இரு நாடுகளின் உயர்மட்ட தலைவர்களின் கருத்து மோதல்கள் பதற்றத்தை மேலும் வலுவாக்கின. இதற்கிடையே, ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து, கைகுலுக்கி பேசிக் கொண்டனர்.
ஊடகங்களின் பரப்பு
இதனால், போர்ப் பதற்றம் சற்று தணிந்தது. இந்நிலையில், இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனை இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் கலாச்சார உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என சீன வெளியுறவு உயர் அதிகாரி கூறியுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
தற்காலிகமான ஒன்றுதான்
"எல்லைப்பிரச்சனை தற்காலிகமான ஒன்றுதான். அதுநிலையானது அல்ல. ஆயிரம் ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையே வணிகம், பண்பாட்டு அளவிலான உறவுகள் வலுவாக உள்ளன.
Recommended Video
உறவு தொடர்கிறது
இந்திய தொலைக்காட்சிகள் இந்த விஷயத்தை பரபரப்பாக விவாதிக்கின்றன. அதைக் கண்டு கவலை கொள்ள தேவையில்லை. இந்திய அரசு என்ன நிலைப்பாடு கொண்டுள்ளதோ, அதனைக் கொண்டுதான் சீனா, அந்நாட்டுடன் உறவை தொடர்கிறது" என சீன வெளியுறவு அதிகாரி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.