டாலர், பவுண்ட் வரிசையில் இந்திய ரூபாய் பத்திரங்கள்.. சிங்கப்பூரில் இந்தியர்கள் மத்தியில் மோடி உரை
சிங்கப்பூர்: இந்திய ரூபாய் பத்திரங்களை சில நாடுகளில் வெளியிட நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இது இந்திய பொருளாதாரம் மற்றும் பண மதிப்பு மீதான நம்பிக்கையின் வெளிப்பாடு. உலகிலுள்ள யாரும் இந்திய ரூபாய் பத்திரத்தில் முதலீடு செய்யலாம். முன்பெல்லாம், டாலர், பவுண்ட், தங்கம் மட்டுமே மதிப்புக்குறியதாக இருந்தது. இனி இந்திய ரூபாய் அப்படி மாறும் என சிங்கப்பூரில் இந்தியர்கள் மத்தியில் மோடி தெரிவித்தார்.
சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று மாலை அங்கு இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றியதாவது:
உலகமே ஒரே குடும்பம் என்பதை வாழ்வியல் நெறிமுறையாக கொண்டது இந்தியா. சகிப்புத்தன்மை இல்லாத செயல்களுக்கு இந்தியாவில் இடமில்லை.
We have to let past inspire us to work on the present and build a future: PM #ModiInSingapore pic.twitter.com/tKVHcjhMW3
— ANI (@ANI_news) November 24, 2015
சிங்கப்பூரிடமிருந்து இந்தியா பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். அதில் முக்கியமானது சுத்தம். சுத்தமாக இருப்பதற்கு சிங்கப்பூர் வழிகாட்டுகிறது. மகாத்மா காந்தியிடம் சுத்தமா, சுதந்திரமா என்று கேட்டபோது, சுத்தத்திற்குதான் முன்னுரிமை தருவேன் என்று கூறியிருந்தார். இந்தியர்கள் தற்போது சிங்கப்பூர்போலவே சுத்தத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். எனவே கிளீன் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு பெருகிவருகிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்களான நீங்கள்தான் நமது நாட்டின் பெருமையை உலகுக்கு பறைசாற்றி வருகிறீர்கள். சிங்கப்பூர் வளர்ச்சியில் இந்தியர்கள் பங்கு அதிகம். இந்தியாவில் பாஜக அரசு வந்த பிறகு நேரடி அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது.
இந்தியர்கள் முதலீடு செய்ய தேர்ந்தெடுக்கும் நாடுகளில் முக்கியமானது சிங்கப்பூர். இந்தியாவும், சிங்கப்பூரும் பல துறைகளில் இணைந்து பணியாற்ற முடியும். இந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாடுகளில் சிங்கப்பூர் 2வது இடம் பிடித்துள்ளது. நமது கண்முன்னே அதிவேகமாக வளர்ந்த ஒரு நாடு சிங்கப்பூர். மாற்றம் நாட்டு மக்களிடமிருந்தே வர வேண்டும். எந்த ஒரு மாற்றமும் அரசுகளால் வந்தது கிடையாது, மக்களால்தான் வர வேண்டும்.
முதலீடு செய்ய எளிமையான நாடுகள் என்று உலக வங்கி தயாரித்த பட்டியலில், இந்தியா 12 இடங்கள் முன்னேறியுள்ளது. இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் 40 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளன. ரயில்வே துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்துள்ளோம்.
இந்திய ரூபாய் பத்திரங்களை சில நாடுகளில் வெளியிட நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இது இந்திய பொருளாதாரம் மற்றும் பண மதிப்பு மீதான நம்பிக்கையின் வெளிப்பாடு. உலகிலுள்ள யாரும் இந்திய ரூபாய் பத்திரத்தில் முதலீடு செய்யலாம். முன்பெல்லாம், டாலர், பவுண்ட், தங்கம் மட்டுமே மதிப்புக்குறியதாக இருந்தது. இனி இந்திய ரூபாய் அப்படி மாறும்.
இருப்பினும் மோடி என்ன செய்தார் என அறியாமல் கேட்கும் இந்தியர்கள்தான் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு இந்த திட்டம் விவாதத்தை கிளப்பிவிடும் என நம்புகிறேன்.
இந்திய பணியாளர்கள் திறனை மேம்படுத்த, சிங்கப்பூர், ஜெர்மனி, அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.
இந்திய பாதுகாப்பு துறை ஒப்பந்தங்கள் அனைத்தும் ஊழல் கறை படிந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகின. ஆனால் கடந்த 18 மாத எங்கள் ஆட்சியில், ஒரு விரலை கூட நீட்டி குறை கூறமுடியவில்லை. அனைத்தும் வெளிப்படையாக நடந்த ஒப்பந்தங்களாகும். எனவேதான் 19 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை பாதுகாப்பு துறையில் அனுமதிக்க முடிவு செய்தோம்.