இந்தியாவில் 60 கோடி மக்களுக்கு திறந்தவெளிதான் “டாய்லெட்” – ஐ.நா.சபை
நியூயார்க்: சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடான இந்தியாவில் 60 கோடி மக்கள் திறந்த வெளிகளையே கழிப்பிடங்களாக பயன்படுத்துகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அவல நிலையை மாற்ற உயரிய அளவிலான அரசியல் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
உலக கழிவறை தினமான இன்று வெளியிடப்பட்ட இது தொடர்பான ஐ.நா ஆய்வறிக்கை, உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதியினர் பொது இடங்களையே கழிவறையாக பயன்படுத்தி வருவதாகவும், இவர்களில் 82 சதவீதத்தினர் இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் மட்டும் வசித்து வருவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த 10 நாடுகளில் முதல் இடம் பெற்றுள்ள இந்தியாவில் நாள்தோறும் கிட்டதட்ட 60 கோடி பேர் திறந்தவெளிகளையே கழிவறையாக்கிக் கொள்கின்றனர் என இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலின் இரண்டாமிடத்தில் இந்தோனேசியா, மூன்றாமிடத்தில் பாகிஸ்தான், நான்காமிடத்தில் நேபாளம், ஐந்தாமிடத்தில் (1 கோடி மக்கள்) சீனா உள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான், நைஜர், மொஸாம்பிக் ஆகிய நாடுகள் முறையே 6 முதல் 10 வரையிலான இடங்களை இந்த பட்டியலில் பிடித்துள்ளன.