இந்தியாவில் 'ஹாயாக' காலைக்கடன் கழிப்போர் எண்ணிக்கை குறைகிறது: ஐ.நா ஆறுதல்
நியூயார்க்: திறந்த வெளிகளில் மலம் கழிப்போர் எண்ணிக்கை இந்தியாவில் குறையத்தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையொன்று.
சுகாதாரம் மற்றும் குடிநீர் திட்ட மேம்பாடு குறித்த ஐநா அறிக்கையில் சில அம்சங்கள்:
உலகில் 2.4 பில்லியன் மக்கள், கழிவு அகற்றும் வசதியின்றி உள்ளனர். அதில் 946 மில்லியன் மக்கள், திறந்தவெளிகளில்தான் மலம் கழிக்கின்றனர். இந்தியா உள்ளிட்ட உலகின் 16 நாடுகளில் சராசரியாக, திறந்த இடங்களில் மலம் கழிப்பது 25 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவை மட்டும் எடுத்துக் கொண்டால், இது 31 சதவீத வளர்ச்சியாகும். இது லேசான முன்னேற்றம்.
நேபாளம், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிலும் கணிசமான அளவுக்கு முன்னேற்றம் உள்ளது. இருப்பினும் இந்தியாவைவிட சற்று குறைவே. மக்களுக்கு குடிநீரை கொண்டு சேர்ப்பதில், இந்தியா தனது இலக்கை எட்டியுள்ளது. 1990களில், 71 சதவீத இந்தியர்களுக்கு குடிநீர் என்பது எட்டும் தூரத்தில் இருந்தது. இது தற்போது 94 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு ஐ.நா தனது அறிக்கையில் கூறியுள்ளது.
தூய்மை இந்தியா திட்டம் மற்றும் கழிவறையின் அவசியம் குறித்த தொலைக்காட்சி, தொடர் விளம்பரங்கள் வருங்காலத்தில், திறந்த வெளி மலம் கழித்தல் நடைமுறையை இந்தியாவில் இருந்து முற்றாக குறைக்கும் என்று நம்பலாம்.