விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியா-இஸ்ரேல் கையெழுத்து
டெல் அவிவ்: இந்தியா, இஸ்ரேல் நாடுகளுக்கிடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
3 நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டுடனான 7 புரிந்தணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
நீர் மேலாண்மை, விவசாயம், விண்வெளி ஆராய்ச்சிக்கு கைகோர்ப்பது உள்ளிட்ட 7 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர். இதன் பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இரு தரப்பு வாய்ப்புகளுக்காக மட்டும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, உலக நாடுகளின் அமைதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கலந்தரையாடியுள்ளோம்.
இஸ்ரேலுக்கு வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். இஸ்ரேல், இந்தியா இடையேயான நட்புறவை புதுப்பிப்பதற்காகவே இந்த சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம். நீர் மேலாண்மை, விவசாயத்தில் இஸ்ரேல் முன்னணி வகிக்கிறது. அவர்களிடம் இருந்து தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற்று விவசாய உற்பத்தியை நாம் அதிகரிக்க முடியும்.
இரு நாடுகளும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட உறுதியேற்றுள்ளோம். பரஸ்பரை ஒப்பந்தங்களில் பல்வேறு புதிய அம்சங்களை இணைத்துள்ளோம். அமைதி, பேச்சுவார்த்தையே பலம் என்று இந்தியா நம்புகிறது.
இந்தியாவில் இருந்து இஸ்ரேலக்கும், இஸ்ரேலில் இருந்து இந்தியாவிற்கும் கல்வி பயில்வதற்காக வந்து செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நமது இரு நாட்டு நட்புறவை பலப்படுத்தும் விதமாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்தியா வர வேண்டும் என்றும் மோடி அழைப்பு விடுத்தார்.