நேபாளத்திற்கு இனி 500, 1000 ரூபாய் எடுத்துச் செல்ல அனுமதி – 10 ஆண்டாக இருந்த தடை நீக்கம்
காத்மாண்டு: இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கும், நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கும் பொதுமக்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நீக்கப்பட்டுள்ளது.
சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாளம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் காத்மாண்டுவில் இதனை அறிவித்தார்.
எங்கள் நாட்டு மக்கள் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கமாக இங்கு கொண்டு வருவதற்கு அனுமதி அளிக்க முடிவு செய்திருக்கிறோம் என்று மோடி குறிப்பிட்டார்.
கள்ள நோட்டுக்கள் ஊடுருவி பெருகிவிடும் என்பதால் 100 ரூபாயைவிட அதிக மதிப்புடைய நோட்டுகளை தடை செய்ய வேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டதற்கிணங்க, நேபாளத்தில் இதுவரை இந்தியாவின் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டிருந்தது.
இதனால், 100 ரூபாய் நோட்டுகளை மட்டுமே இந்தியாவில் இருந்து எடுத்துவர முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது அந்த கட்டுப்பாடு விலக்கப்பட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் பயனடைவார்கள்.