அமெரிக்கத் தலைநகரில் இந்திய குடியரசு தின கொண்டாட்டம்!
வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் வட்டாரத்தில் 67 வது இந்திய குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வரலாறு காணாத கனமான பனிப்பொழிவு காரணமாக, இயல்பு நிலை பாதிக்கப்பட்ட போதிலும், சனிக்கிழமை ஜனவரி 30ம் தேதி, எலனர் ரூஸ்வெல்ட் உயர் நிலைப் பள்ளி வளாகத்தில், திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்றது.
நேஷனல் கவுன்சில் ஆஃப் ஏசியன் இண்டியன் அசோசியேஷன் சேர்மன்(National Council of Asian Indian Association - NCAIA) சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், அமைப்பின் தலைவர் டாக்டர்.ஹர் ஸ்வரூப் சிங் வரவேற்புரை ஆற்றினார்.
வாஷிங்டன் இந்தியத் தூதரகத்தின் அம்பாசிடர் தரன்ஜித் சிங் சந்து (Taranjit Singh Sandhu, the Deputy Chief of Mission at Indian Embassy of Washington) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழா மலரையும் அவர் பெற்றுக்கொண்டார்.
சமூக ஆர்வலரும், சமுதாய புரவலருமான ஃப்ராங்க் இஸ்லாம் சிறப்புரை ஆற்றினார். மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் , அன்பு, அமைதி மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய மூன்றையும் வலியுறுத்தும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
டாக்டர் ராஜன் நடராஜன்
பிரின்ஸ் ஜார்ஜ் கவுண்டி தலைமைச் செயலாளர் ரஷெர்ன் பேக்கர், வெளியுறவுக் கொள்கை நிபுணர் மற்றும் காங்கிரஸ் சபை உறுப்பினர் க்ரிஸ் வேன் ஹாலனின் மனைவியுமான கேத்தரின் வேன் ஹாலன், மேரிலாண்ட் போக்குவரத்து ஆணையர் டாக்டர் ராஜன் நடராஜன், வாஷிங்டன் காந்தி மையம் இயக்குனர் கேரி ரிபுலஸ் ஆகியோர் குடியரசு தின உரை ஆற்றினர்.
மகாத்மா காந்தியின் பணிகளைப் பற்றிக் குறிப்பிட்ட அவர்கள், அவருடைய கொள்கைகள் உலகம் முழுவதும் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று எடுத்துரைத்தார்கள். மேலும், அமெரிக்க சிவில் உரிமை போராட்டம் முற்றிலும் காந்தியக் கொள்கைகளை பின்பற்றி வெற்றி பெற்றதையும் நினைவு கூர்ந்தார்கள்.
விழாவில் இரு நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றிருந்தது முக்கியம் வாய்ந்ததாகும்.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தையும் நினைவுபடுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள், நடனம், பாடல்கள் மற்றும் ஃபேஷன் ஷோ நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை டி.கோபிநாத் செய்திருந்தார். விழாவில் , சமுதாய சேவைக்காக க்ளோபல் டெலிவிஷன் நிலிமா மேஹ்ரா கவுரவிக்கப்பட்டார். நேஷனல் கவுன்சில் ஆஃப் ஏசியன் இண்டியன் அசோசியேஷன் பிரசிடெண்ட் கிஸ்லா கானி நன்றியுரை ஆற்றினார்.