சிங்கப்பூரில் கழிவறையில் பெண்களை தவறாக படம்பிடித்த இந்தியருக்கு சிறை!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பெண்கள் கழிவறைக்குள் நுழைந்து பெண்களை செல்போனில் படம் பிடித்த இந்தியர் ஒருவருக்கு அந்நாட்டில் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனங்களில் சேரும் கழிவுக் குப்பைகளை அகற்றும் ஒரு கம்பெனியில் இந்தியரான குல்தீப் சிங் என்பவர் டிரைவராக பணியாற்றி வந்தார்.
கடந்த அக்டோபர் மாதம் ஒரு நிறுவனத்தில் இருந்து ரசாயனக் கழிவுகளை ஏற்றிச் செல்ல வந்த அவர், அந்நிறுவனத்தின் பெண்கள் கழிவறைக்குள் நுழைந்தார்.
உள்ளே ஒரு பெண் உடைமாற்றிக் கொண்டிருப்பதை கண்ட அவர் அந்தக் காட்சியை மிகவும் சுவாரஸ்யமாக தனது செல்போன் மூலம் படம் பிடிக்கத் தொடங்கினார்.
இதை அந்தப் பெண் பார்த்துவிட்டு பயங்கரமாக கூச்சலிட்டார். விரைந்து வந்த இதர ஊழியர்கள் குல்தீப் சிங்கை பிடித்து தர்மஅடி போட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவரது செல்போனை போலீசார் ஆராய்ந்தபோது, கடந்த ஏபரல் மாதத்தில் இதேபோல் ஒரு பெண்கள் கல்லூரிக்கு கழிவுகளை சேகரித்துவர சென்ற போது, அங்குள்ள கழிவறையிலும் ஒரு பெண்ணின் நிர்வாணக் கோலத்தை அவர் படம் பிடித்திருப்பது தெரிய வந்தது.
அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இது தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கின்போது, தனது கட்சிக்காரர் முட்டாள்தனமாக இந்த காரியத்தை செய்து விட்டதாகவும், குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டு விட்டதாலும் அந்த வாலிபருக்கு மிகக் குறைந்த தண்டனை விதிக்க வேண்டும் என்று அவரது வக்கீல் வாதாடினார்.
மேலும், இந்தத் தவறினால் வரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்த அவரது திருமண ஏற்பாடு ரத்தாகிப் போனதாகவும் அவர் தெரிவித்தார். இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றவாளி குல்தீப் சிங்குக்கு 3 வார சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அவரது வக்கீல் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த குறைந்தபட்ச தண்டனையை விதிப்பதாகவும், முறைப்படி அவர் மீது சாட்டப்பட்டிருந்த 4 குற்றப்பிரிவுகளுக்கும் சேர்த்து தண்டனை விதிப்பதாக இருந்தால் 15 மாத சிறை தண்டனையும் அபராதமாக ஒரு பெரும் தொகையையும் விதிக்க வேண்டி இருந்திருக்கும் எனவும் குற்றவாளியை நீதிபதி எச்சரித்தார்.