அமெரிக்காவில் புதிய தொழில்முனைவோர் களத்தில் உயரும் இந்தியர்களின் கை
அமெரிக்காவில் புதிய தொழில்முனைவோராக இந்திய வம்சாவளியினர் அதிகரித்து வருகின்றனர்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய தொழில்முனைவோர்களாக இந்தியர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால் பல சுந்தர் பிச்சைகள் உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
அமெரிக்கர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைகளை எல்லாம் இந்தியர்கள் பிடுங்கிக் கொள்கின்றனர் என்ற விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. குறிப்பாக ஐடி துறையில் இந்தியர்களின் பங்கு குறித்து இப்போதுள்ள அதிபர் டிரம்ப் அதிகமாகவே விமர்சித்தார்.
ஆனால், அதனை எல்லாம் தாண்டி தற்போது இந்திய வம்சாவளியினர் தொழில் முனைவோர்களாகவும் அமெரிக்காவில் வளர்ந்து வருகின்றனர்.
முதல் தலைமுறை தொழில் முனைவோர்
அமெரிக்காவில் 1980களில் இந்தியர்கள் தொழில் தொடங்கத் தொடங்கினர். அவர்கள்தான் அமெரிக்காவில் தொழில் தொடங்கிய முதல் தலைமுறையினர். அவர்களில் கன்வால் ரேக்கி, வினோத் கோசலா, நரேன் குப்தா, பிரபு கோயல், சுகாஸ் பாட்டீல் மிகவும் முக்கியமானவர்கள்.
அமெரிக்க நுகர்வோர் சந்தை
முதன் முதலில் நிறுவனங்களை தொடங்கிய இந்தியர்கள் அமெரிக்காவின் நுகர்வு சந்தை நிலவரம் குறித்த அச்சத்தில் இருந்தனர். அதனால் நுகர்வோருக்குத் தொடர்பில்லாத என்ஜீனியரிங் உள்ளிட்ட நிறுவனங்களைத் தொடங்கினர்.
இந்தியர் தொடங்கிய ஹாட்மெயில்
இதனைத் தொடர்ந்து நுகர்வு சந்தையை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களைத் தொடங்க இந்தியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்குச் சிறந்த உதாரணமாக இந்தியாவைச் சேர்ந்த சபீர் பாட்டியா 1996ல் உருவாக்கிய ஹாட்மெயில்.காம் நிறுவனத்தைக் கூறலாம்.
அமெரிக்க நிறுவனங்களில் இந்திய தலைமை
காலப்போக்கில் பல நிறுவனங்கள் இந்தியர்களைத் தலைமை பொறுப்பில் கொண்டு இயங்கத் தொடங்கின. ஐஐடி மாணவராக தீரஜ் பாண்டே, ஜோதி பன்சால், மணிஷ் சந்திரா ஆகியோர் முக்கிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தினார்கள்.
8 சதவீத தொழில்கள்
அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் 1 சதவீதத்திற்கும் குறைவாக வாழும் இந்தியர்கள் 8 சதவீத அளவிற்குத் தொழில்களை தொடங்கி வைத்துள்ளனர். கடந்த கடைசி 5 ஆண்டுகளில், சாப்ட்வேர் மற்றும் சேவை துறைகளில் இந்தியர்கள் தொடங்கிய நிறுவனங்கள்தான் முதல் 17 இடங்களில் உள்ளன. இந்தியர்களின் அபிஜி, ஆஸ்பெக்ஸ், வேபேர் உள்ளிட்ட 34 நிறுவனங்களில் 29 சதவீதம் பங்கு சந்தையில் இடம் பெற்றுள்ளது.
இந்தியர்களின் பங்கு
அமெரிக்காவில், ஒரு பில்லியன் மதிப்பைக் கொண்ட தனியார் நிறுவனங்கள் 261 இயங்குகின்றன. இதில் 14 நிறுவனங்கள் இந்திய வம்சாவளியினர் தலைமையில் உருவானது. இந்த 14 நிறுவனங்களும் 35.17 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டது. இந்த நிறுவனங்களில் இருந்து 81.8 பில்லியன் டாலர் ஐடி துறைக்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.