துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் கூட்டம்
துபாய்: துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இந்தியர்களை மட்டுமல்லாது அமீரக மக்களின் மனதையும் கொள்ளை கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் கடந்த திங்கட்கிழமை மாலை மரணம் அடைந்தார். இந்தச் செய்தி அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் கூட்டத்தை வியாழக்கிழமை காலை நடத்தியது. இந்த கூட்டத்தில் இந்திய துணைத் தூதர் அனுராக் பூஷன் இரங்கல் உரையினை வாசித்தார். அதன் பின் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்துல் கலாம் அவர்கள் சாதாரண நிலையில் இருந்து இந்திய ஜனாதிபதியாக உயர்ந்ததையும், அதனை அடைவதற்கு அவர் பட்ட அனுபவங்களையும் துணைத் தூதர் விவரித்தார். அவரது இழப்பு இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு எனக் குறிப்பிட்டார். மேலும் அவர் மீது அன்பு கொண்டிருந்ததன் காரணமாக துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் உள்ள இரங்கல் பதிவேட்டில் ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, கனடா, கென்யா, கொரியா, கத்தார், இலங்கை, குவைத், பாகிஸ்தான், ஓமன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், இந்திய சமூக மக்களும் பதிவு செய்தனர்.
முன்னதாக அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் குறும்படம் ஒன்றும் காண்பிக்கப்பட்டது. பலரும் தங்களது இரங்கலில் மக்களின் ஜனாதிபதி மறைந்தார் என்றும், இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்தவர் கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த கூட்டத்தில் இந்திய வர்த்தக பிரமுகர்கள், இந்திய சமூகத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.