இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு - 10 பேருக்கு தூக்கு
ஜகர்த்தா: இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அங்கு ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தியதாக பிரேசில், பிரான்ஸ், நைஜீரியா, ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்சை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்தோனேசிய ஜனாதிபதியிடம் கருணை மனு அளிக்கப்பட்டது. மேலும் தண்டனை பெற்றவர்களின் நாட்டு தூதரகங்களும் தூக்கு தண்டனையை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்தன.
குறிப்பாக ஆஸ்திரேலிய குற்றவாளிகள், ஆன்ட்ரூகான், மயூரன் சுகுமாரனுக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அரசு குரல் கொடுத்தது. அதை இந்தோனேசிய அரசு நிராகரித்தது.
போதை பொருள் கடத்தலால் நாட்டில் குற்றங்கள் பெருகி நாட்டுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி ஜனாதிபதி ஜோகோ விடோடோ மறுத்துவிட்டார். அதை தொடர்ந்து 10 பேரின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் அனைவரும் நுசாகம்பங்கள் தீவில் உள்ள சிறையில் தூக்கிலிடப்பட உள்ளனர். தண்டனை நிறைவேற்ற அங்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வெளிநாட்டு கைதிகள் என்பதால் அது குறித்த சம்மன் குற்றவாளிகளின் நாட்டு தூதர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை உடனே நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் தற்போது அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.