தெருவோரம் அதிகரிக்கும் வெளிநாட்டு "திருவோடுகள்"... இது "ஸ்வீட்" ஸ்வீடனின் டென்ஷன் கதை!!
ஸ்டாக்ஹோம்: ஆயிரம் தீவுகளின் நாடு என்று அழைக்கப்படும் ஸ்வீடன் நாட்டில் ஒரு புதிய பிரச்சினை வெடித்துள்ளது. எல்லாம் பிச்சைக்காரர்கள் பிரச்சினைதான். அவ்வளவு வளமான ஸ்வீடனில் பிச்சைக்காரர்களா என்று ஆச்சரியப்படலாம். உண்மைதான், ஆனால் இந்தப் பிச்சைக்காரர்கள் எல்லாம் உள்ளூர்க்காரர்கள் அல்ல. மாறாக பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
சமீப காலமாக இந்த வெளிநாட்டு பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகரித்து வருவதாக ஸ்வீடன் நாட்டினர் புலம்புகின்றனர். இவர்கள் இங்கு வந்து பிச்சை எடுப்பதால் தங்களது நாட்டின் பெயர் கெடுவதாகவும் அவர்கள் எரிச்சலுடன் கூறுகிறார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்று ஸ்வீடன். முற்றிலும் தீவுகள் நிரம்பிய தேசம். ஆயிரக்கணக்கான தீவுகள் இங்கு உள்ளன. வளமான நாடு ஸ்வீடன். ஆனால் இங்கு வெளிநாட்டுப் பிச்சைக்காரர்களால் மக்கள் டென்ஷனாக உள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிச்சைக்காரர்கள்
ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோம் உள்பட அனைத்து முக்கிய நகரங்களிலும் வெளிநாட்டுப் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம். பெரும்பாலானவர்கள் ருமேனியா, பல்கேரியா போன்ற நாடுகளிலிருந்து வந்து இங்கு பிச்சை எடுக்கிறார்களாம்.
4000 பேர்
கிட்டத்தட்ட 4000 பேர் வரை பிச்சைக்காரர்களாக இங்கு நடமாடி வருவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஐரோப்பிய யூனியனின் குடிமக்களுக்கான சுதந்திர நடமாட்டம் என்ற சலுகையை இந்தப் பிச்சைக்காரர்கள் தவறாக பயன்படுத்தி இவ்வாறு ஸ்வீடனுக்கு வந்து பிச்சை எடுப்பதாக ஸ்வீடன் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
எங்கு பார்த்தாலும்
சூப்பர் மார்க்கெட்டுகள், மருந்துக் கடைகள், அழகு நிலையங்கள், உணவு விடுதிகள் என எங்கு பார்த்தாலும் வெளிநாட்டுப் பிச்சைக்காரர்களை அதிக அளவில் காண முடியும்.
காபி கோப்பையுடன்
காபி கோப்பைகளுடன் இவர்கள் அமர்ந்திருப்பார்கள். இரக்கப்படுவோர் அதில் காசு போட்டு விட்டுச் செல்வார்கள். சிலர் காபி வாங்கிக் கொடுப்பதும் உண்டாம். சிலர் சாப்பாடும் வாங்கித் தருவார்களாம்.
வித்தியாசமான காட்சி
இதுபோன்ற பிச்சைக்காரர்கள் முழங்காலிட்டு அமர்ந்தபடி காணப்படுகிறார்கள். அதேசமயம், வளமையான ஸ்வீடன் குடிமக்கள் காஸ்ட்லியான டிரஸ் போட்டுக் கொண்டு அவர்களை கடந்து செல்வதும் இங்கு சர்வ சாதாரணமான காட்சியாக உள்ளது.
முன்பும் இருந்தார்கள்
முன்பும் கூட ஸ்வீடனில் பிச்சைக்காரர்கள் இருந்தனர். ஆனால் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே அவர்கள் இருந்தனர். ஆனால் சமீப காலமாகத்தான் இது அதிகரித்து வருகிறதாம்.
வடக்கு ஆப்பிரிக்க சிறார்கள்
அதிலும் வடக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சிறார்களும் கூட தற்போது பிச்சைக்காரர்களாக சாலையோரங்களில் காணப்படுகிறார்கள். கிட்டத்தட்ட 200 சிறார்கள் வரை ஸ்டாக்ஹோம் நகரின் சாலையோரமாக வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும் பாலானோர் பிச்சை எடுக்க பயன்படுத்தப்படுகின்றனராம்.
குற்றச் செயல்களில்
கடந்த 2 ஆண்டுகளில் இவர்கள் ஸ்வீடன் வந்து சேர்ந்தவர்கள். இவர்கள் யாருடைய துணையும் இன்றி தாங்களாகவே ஸ்வீடன் வந்து சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்களின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியாக காணப்படுவதாக ஸ்வீடன் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
புலம்பும் போலீஸார்
இந்த சிறார்களில் பலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் ஸ்வீடன் போலீஸார் கூறுகிறார்கள். இளம் சிறார்களாக இருப்பதால் இவர்களைப் பெரிய அளவில் தண்டிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் புலம்புகிறார்கள்.
எங்கு பார்த்தாலும் இவர்களா
இதுபோன்றவர்களின் குற்றச் செயல்களால் தங்களது நாடு அழிக்கப்பட்டு வருவதாக ஸ்வீடன் மக்களும் குற்றம் சாட்டுகிறார்கள். பூங்காக்கள், நூலகம், பொது இடங்கள் என எங்கு பார்த்தாலும் இவர்கள் நிரம்பி வழிவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரச்சினை!