ட்ரம்பின் படுக்கையறைக்கு அருகே மர்ம நபர்.. வெள்ளை மாளிகை அதிகாரிகளின் கவனக் குறைவா ?
வாஷிங்டன்(யு.எஸ்): கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெள்ளை மாளிகையில் மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். தடுப்புக் கம்பி சுவர்களைத் தாண்டி, பல்வேறு பாதுகாப்பு வளையங்களையும் கடந்து ட்ரம்பின் படுக்கையறை இருக்கும் பகுதியில் கதவை திறக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்.
கலிஃபோர்னியாவைச் சார்ந்த ஜானத்தன் ட்ரான் என்ற 26 வயது மர்ம நபர், மெயின் கேட்டைத் தாண்டி பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக யாரிடமும் பிடிபடாமல் வெள்ளை மாளிகையின் கதவுக்கருகே வந்து விட்டார்.
அதிபரின் பாதுகாப்பை கவனித்து வரும் பாதுகாப்புத் துறை ஒரு வாரம் கழித்து நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது
முதலில் ஐந்தடி உயர தடுப்புப் கம்பிச் சுவரை தாண்டிய மர்ம நபர், பின்னர் எட்டடி உயர கதவில் ஏறி குதித்துள்ளார். பின்னர் மூன்றரை அடி உயர தடுப்பு கம்பிகளை தாண்டிய பிறகு பாதுகாப்புத் துறையினர் பிடித்துள்ளனர் என்று கூறப்பட்டிருக்கிறது.
அவை கண்காணிப்பு கமிட்டித் தலைவர் ஜேசன் சேஃபெட்ஸ், மர்ம நபர் வெள்ளை மாளிகை தெற்கு கதவை திறக்க முயற்சித்துள்ளான் என்று கூறியுள்ளார்.
கண்காணிப்பு காமிராக்கள், ரகசிய போலீசார், மோப்ப நாய்கள், தொழில் நுட்பம் என்று மில்லியன் கணக்கில் டாலர்களை செலவழித்தாலும் இதுதான் நடக்கிறது என்றால் என்ன சொல்வது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல் தடுப்புச் சுவர் தாண்டி பதினேழு நிமிடங்கள் மர்ம நபர் பாதுகாப்புத் துறையினரிடம் பிடிபடாமல் இருந்திருக்கிறான் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
மர்ம நபரின் ஊடுறுவலினால், அலாரம் அடித்துள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, மேற்கொண்டு முன்னேறியிருப்பதாகவும் சிஎன்என் தொலைக்காட்சியிக்கு தகவல்கள் வந்துள்ளதாக கூறியுள்ளது.
மர் ம நபர் மாலை 6 மணியிலிருந்தே வெள்ளை மாளிக்கை முன்புறம் உள்ள பென்சில்வேனியா அவென்யூவில் சுற்றிக் கொண்டிருந்தது கண்காணிப்பு காமிராக்கள் மூலம் தெரியவந்துள்ளது.
நள்ளிரவு பன்னிரண்டு மணி அளவில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளான். அப்போது அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தான் இருந்துள்ளார். நள்ளிரவே அவருக்கு தகவல் கூறப்பட்டுள்ளது. மறு நாள் மர்ம நபரின் ஊடுறுவலை முறியடித்ததற்காக பாதுகாப்பு அதிகாரிகளை ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.
ஆனால், ஆய்வுகளுக்குப் பிறகு வெள்ளை மாளிகை பாதுகாப்பு பற்றி பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
-இர தினகர்