அவங்க தரலன்னா என்ன? நாங்க தர்றோம்.. ஓரங்கட்டப்பட்ட கத்தாருக்கு உதவிக்கரம் நீட்டும் ஈரான்!
அரபு நாடுகளால் புறக்கணிக்கப்பட்ட கத்தார் நாட்டுக்கு விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் உணவு காய்கறி, பழங்களை ஈரான் அரசு அனுப்பியுள்ளது.
தோகா: அரபு நாடுகள் ஓரங்கட்டப்பட்டுள்ள கத்தார் நாட்டுக்கு ஈரான் உதவிக்கரம் நீட்டியுள்ளது. 5 விமானங்கள் மற்றும் 3 கப்பல்களில் காய்கறிகள் மற்றும் பழங்களை ஈரான் அரசு வழங்கியுள்ளது.
ஐஎஸ் தீவிரவாதிகளை ஊக்குவிப்பதாகவும், அல்கொய்தா தீவிரவாத அமைப்புக்கு அடைக்கலம் தருவதாகவும் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்வதகாவும் பஹ்ரைன், யுஏஇ, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கத்தார் மீது குற்றம்சாட்டின.
மேலும் கத்தாருடனான உறவைத் முறித்துக் கொள்வதாகவும் அரபு நாடுகள் அறிவித்தன. இதைத்தொடர்ந்து கத்தாருடன் கடல் மறும் வான்வழி போக்குவரத்தையும் துண்டித்துக்கொள்வதாக தெரிவித்தன.
கத்தாருடன் முறிவு
தூதர்களை திரும்ப பெற்ற அந்நாடுகள் தங்கள் நாட்டு மக்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்றும் கத்தார் நாட்டு மக்கள் வெளியே வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தன. இதைத்தொடர்ந்து கத்தாருடனான சாலை வழிப் போக்குவரத்தையும் அந்நாடுகள் மூடின.
கத்தாரில் தட்டுப்பாடு
இதனால் உலக பணக்கார நாடுகளில் ஒன்றான கத்தார் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உதவிக்கரம் நீட்டிய ஈரான்
ரம்ஜான் நோன்பு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அரபு நாடுகளால் ஓரம் கட்டப்பட்ட கத்தாருக்கு ஈரான் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
சமரச முயற்சி
கத்தார் நாட்டுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உதவிகள் வழங்க தயாராக இருப்பதாக ஈரான், துருக்கி ஆகிய நாடுகள் அறிவித்தன. அந்நாடுகள் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுடன் சமரச முயற்சியிலும் ஈடுபட்டன.
440 டன் காய்கறி, பழங்கள்
இந்நிலையில், கத்தார் நாட்டுக்கு ஐந்து விமானங்கள் மற்றும் மூன்று கப்பல்களில் சுமார் 440 டன் எடையிலான காய்கறிகள் மற்றும் பழங்களை மனிதநேய அடிப்படையில் ஈரான் அனுப்பியுள்ளது. கத்தாரில் உணவு தட்டுப்பாடு நீங்கும் வரை உணவுப்பொருட்கள் தொடர்ந்து அனுப்பப்படும் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
100 விமானங்கள் பறக்கலாம்
மேலும், தனது வான்வழியாக தினமும் 100 கத்தார் விமானங்கள் பறக்க தொடர்ந்து அனுமதியளிக்கும் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் அரசின் இந்த நடவடிக்கையால் கத்தாரில் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்ட பற்றாக்குறை ஓரளவுக்கு கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.