ஐ.எஸ். பயங்கரவாதி பக்தாதி பலியானது உண்மைதானா? தலிபான்கள் பாணியில் மவுனம்?
பாக்தாத்: ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான அபு பக்கர் அல் பக்தாதி அமெரிக்காவின் விமானத் தாக்குதலில் பலியானதாக மீண்டும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் ஐ.எஸ். இயக்கம் இது தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஐ.எஸ். இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான செய்தி நிறுவனமான 'அமாக்'கை மேற்கோள்காட்டி பக்தாதி பலியானதாக கடந்த 10-ந் தேதியன்று செய்திகள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் பக்தாதி உயிரிழந்துவிட்டதாக ஏற்கனவே சில முறை செய்திகள் வெளியாகி இருந்தன.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.எஸ். இயக்கம் விஸ்வரூபமெடுத்த காலத்தில் நாள்தோறும் வீடியோ, ஆடியோ பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியவர் பக்தாதி. கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பருக்குப் பின்னர் பக்தாதியிடம் இருந்து எந்த ஒரு வீடியோ, ஆடியோ பதிவு வெளியாகவில்லை.
ஆகையால் அமெரிக்காவின் விமானத் தாக்குதலில் பக்தாதி உண்மையில் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த நவம்பர் மாதம் பிரான்ஸ் தலைவர் பாரீஸில் ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதலை நடத்தியது. இதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
இவ்வளவு பெரிய ஒரு தாக்குதலுக்குப் பின்னரும் பக்தாதி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை பக்தாதி உயிரிழந்துவிட்டதை அறிவித்தால் தங்களுக்கு பலவீனமாக இருக்கும் என ஐ.எஸ். இயக்கம் கருதியிருக்கலாம். அல்லது பக்தாதியின் இடத்துக்கு ஒருவரை நியமிக்கும் வரை அறிவிக்காமல் இருப்போம் என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம்.
தலிபான்களின் தலைவர் முல்லா ஒமர் உயிரிழந்ததைக் கூட அந்த இயக்கம் நீண்ட மவுனத்துக்கு பின்னரே உறுதி செய்தது. தலிபான் இயக்கம் பிளவுபட்டுவிடுமோ என்ற அச்சம் காரணமாக புதிய தலைவரை அறிவித்த போதுதான் முல்லா ஒமர் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தியை உறுதி செய்தனர். இதே பாணியைத்தான் ஐ.எஸ். இயக்கமும் தற்போது கையாள்வதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.